2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'மாணவர்களை வழிநடத்துவது பெற்றோரின் கடமை'

George   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மாணவர்களை வழிநடத்துவது பெற்றோருடைய மிகமுக்கியமான கடமையாக விளங்குகின்றது. இதற்கு பாடசாலை ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும்.  மாணவனை பூரணத்துவமுடையவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோரையே சாரும். 

சிறுவயதில் இருந்தே கல்வியறிவு ஆளுமை விருத்தியுடன் கூடியவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரையே சாரும் என வடமாகாண முறைசாரா கல்விப்பிரிவின் உதவிக் கல்விப்பணிப்பாளர் ச.கைலாசநாதன் தெரிவித்தார்.

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கலும்   இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில்  பொது நூலகத்தலைவர் ச.சிவசங்கர் தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்றபோது, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்;ந்து கூறுகையில், வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்.  எழுத்தறிவித்தவன் இறைவன். அதற்கு ஏற்றாற்போல் முன்பள்ளிகளும் தமது செயற்பாட்டை செயற்றிறன் மிக்கதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.  நூலகமானது முன்பள்ளியில் இருந்து முதியோர் கல்வி வரை கற்கக்கூடிய அமைப்பாக விளங்குகின்றது.  

ஏ - 9 வீதி திறக்கப்பட்டதன் பிற்பாடு பல புதிய விடயங்கள் எம்மிடையே வந்து சேர்ந்துள்ளன. இவ்வாறான பல புதிய விடயங்கள் பாடசாலை மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல புதிய விடயங்கள் உயர்தர மாணவர்களிடையே குறுக்கீடுகளை ஏற்படுத்தியுள்ளன. 

மாணவர்கள் படிப்பதற்கான ஏதுவான சூழ்நிலையை பெற்றோர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும்; மாணவர்கள் கற்கின்ற போது பாதுகாப்பாக இருந்து வழிநடத்த வேண்டிய பொறுப்பு உண்டு. 

தமது பிள்ளைகள் கற்கின்ற இடத்திற்கு பெற்றோர் கட்டாயம் செல்லும் நடைமுறை வெளிநாடுகளில் உண்டு. பிள்ளைகளை உற்சாகமூட்டும் வகையான   செயற்பாடுகளை பெற்றோர் மேற்கொள்வார்கள். இவ்வாறான நிலை எமது பிரதேசங்களிலும் உருவாக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் கணிணிக் கற்கைநெறி முக்கியமானதாக விளங்குகின்றது.  ஆரம்ப பிரிவில் இருந்து உயர்தரம் வரை கணிணிக் கற்கையும் அதன் அறிவும் அவசியமானதாக விளங்குகின்றது.

கணிணி அறிவும் பயிற்சியும் அனைவருக்கும் அவசியமானதாக விளங்குகின்றது.  நவீன தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் வகையில் வாழப் பழகுவதற்கும், நவீன உலகியலோடு இசைவாக்கம் அடைவதற்கும் கணிணி அறிவு அவசியமானதாகின்றது. 

மாணவர்கள் சுயமாகக் கற்க வேண்டும். சுயகற்றலே ஆளுமையுள்ள பூரணத்துவமான மாணவனை உருவாக்க முடியும். யாழ்ப்பாணம் கலை கலாசாரத்துக்கு வேரூன்றிய மண் இவ்வாறான மண்வாசனையுடன் அறிவாலயங்களின் ஊடாக  சிறந்த வாழ்க்கையையும் கல்வியறிவுடன் கூடிய வாழ்க்கையும் எதிர்கால இளம் தலைமுறையினராகிய எமது மாணவச் செல்வங்கள் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோருடைய பங்கு மிகஅவசியமானதாக விளங்குகின்றது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .