2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

குருநகர் இளைஞன் படுகொலை: பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

குருநகர் இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில், கடந்த 22ஆம் திகதியன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார்.

அன்றைய தினம், குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மற்றுமோர் இளைஞர் குழுவொன்று, அவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றது.

குறித்த சம்பவத்தில், குறித்த இளைஞன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞனுக்கும் தாக்குதல் நடத்திய இளைஞர் குழுவுக்கும் இடையில், 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும் அதன் தொடர்ச்சியாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞனின் அஸ்திக்கு உறவினர்கள், நண்பர்கள் இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவ்விளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து, கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்தனர்.  

அதன் பின்னர், இளைஞனின் அஸ்தியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதனை அடுத்து, இறுதி கிரியை சடங்கு வழிமுறையை பின்பற்றி, இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்துக்கு கொண்டு சென்று, இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X