2025 மே 01, வியாழக்கிழமை

’தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கு பொறுப்பை ஒப்படைப்பது ஆபத்தானது’

Niroshini   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், மீண்டும் ஒருமுறை சர்வதேசம் அவர்களைக் கையாள ஆரம்பித்திருப்பதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பைத் தனிக் கட்சிகளிடமும் தனிநபர்களிடமும் இவ்வாறு விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது எனவும் கூறினார்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு, நேற்று  (26), நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வரங்குக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதியாக ஜெ.ஆர்.ஜெயவர்த்தன இருந்தபோது, இலங்கையின் கதவுகளை அமெரிக்காவுக்கு அகலத் திறந்துவிட்டிருந்தார் எனவும் அப்போது, அமெரிக்கப் பிரசன்னத்தை இலங்கையில் தவிர்ப்பதற்காக இந்தியா ஈழத்தமிழர்களைக் கையாண்டிருந்தது எனவும் கூறினார்.

இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து இலங்கையைத்தன் வழிக்குக் கொண்டுவந்திருந்தது எனத் தெரிவித்த அவர், இப்போது, ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையைச் சீனாவுக்குத் திறந்துவிட்டுள்ள நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையைப் பணியவைக்கும் முயற்சியில் தமிழ்க் கட்சிகளைக் கையாளத்தொடங்கியுள்ளன எனவும் கூறினார்.

இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும் தமிழ்க் கட்சிகளைக் கையாளத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், இக்கட்சிகள் இராஜதந்திர ரீதியாக இந்நாடுகளைக் கையாளுவதில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றன எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியான செல்திசைக்கு நகர்த்துவதற்கு, வலுவானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகும் என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

'கூட்டுக்கட்சிக்குள்ளே கட்சிகளாகவும் கட்சிகளுக்குள்ளே தனித்தனித் தலைவர்களாகவும் பிரிந்து நிற்பது ஈழத் தமிழர்களைக் கையாளுவதற்குச் சர்வதேசத்துக்கு இலகுவானதாக இருக்கும்.

'ஆனால், ஈழத்தமிழ் இனத்துக்கு மிகவும் ஆபத்தானது. இந்நிலையிலேயே தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகளை ஒருங்கிணைக்கவும், சர்வதேசங்களைத் தமிழ்த் தரப்புக் கையாளுவதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் சிவில் சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது' எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .