2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’நடைமுறைகளை மீறி ஓடும் பஸ்கள் இடைநிறுத்தப்படும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

மாகாணங்களுக்கு இடையில் சுகாதார நடைமுறைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சேவைகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்றைய தினம் (19), இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை உள்ளடக்கி, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.

தற்போது மக்கள் மத்தியில், தடுப்பூசியைப் பெற விருப்பம் இல்லாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு நிலைமை வேண்டாமெனவும் கூறினார்.

நாடு பூராகவும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், எனவே, எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தடுப்பூசியை கட்டாயமாக பெற வேண்டுமெனவும் கூறினார்.

கடந்த காலத்தில், தடுப்பூசி தொடர்பில் பயம் இருந்திருக்கலாமெனவும் ஆனால், இனி அந்தப் பயத்தை தவிர்த்து, தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும், இராணுவக் கட்டளைத் தளபதி வலியுறுத்தினார்.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையில் சுகாதார நடைமுறைகளை மீறி, போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ் சேவைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த அவர், பொலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .