S.Sekar / 2023 பெப்ரவரி 03 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியு அந்தனீஸ் பார்ம்ஸ் (பிரைவட்) லிமிடெட், Aboitiz Equity Ventures Inc.(“AEV”) இன் துணை நிறுவனமான Pilmico International Pte. Ltd இடமிருந்து கோல்ட் கொயின் ஃபீட் மில்ஸ் (லங்கா) லிமிடெட்டின் 100 சதவீத உரிமையாண்மையை கொள்வனவு செய்துள்ளது. அதன் பிரகாரம், இந்நிறுவனம் இனி அந்தனீஸ் ஃபீட் என அழைக்கப்படும்.

நியு அந்தனீஸ் பார்ம்ஸினால் தற்போது முழுமையாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில். தற்போது உற்பத்திச் செயன்முறையை முழுமையாக நிர்வகிக்க முடிவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் தரத்தை மேலும் மேம்படுத்தி, உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. இலங்கையிலிருந்து கோழி இறைச்சி உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் முன்னோடிகளாக நியு அந்தனீஸ் திகழ்வதுடன், இந்தக் கையகப்படுத்தலினூடாக, நிறுவனத்தின் ஏற்றுமதி வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் இலக்குக்கு ஆதரவளிப்பதாகவும், அதனூடாக நாட்டுக்கு பெறுமதி வாய்ந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்துள்ளது.
டிசம்பர் மாத நடுப்பகுதியில் இரு நிறுவனங்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ கைச்சாத்திடலுடன் இந்த கையகப்படுத்தல் பணிகள் பூர்த்தியடைந்திருந்தன. நியு அந்தனீஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்களாக நித்தியா பார்ட்னர்ஸ் செயலாற்றியதுடன், கொள்வனவாளரின் நிதி ஆலோசகராக சமிந்த வீரசிங்க CFA இயங்கினார். விற்பனையாளரின் பிரத்தியேக நிதி ஆலோசகராக TWCorp (Pvt) Ltd இயங்கியதுடன், சட்ட ஆலோசகராக ஜுலியஸ் அன்ட் கிறீஸி இயங்கியிருந்தது.
நியு அந்தனீஸ் குழுமத்தின் தவிசாளர் எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில், “நியு அந்தனீஸைப் பொறுத்தமட்டில் இது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது. Aboitiz குழுமத்திடமிருந்து விலங்கு உணவு வியாபாரத்தை கையகப்படுத்தியுள்ளமையினூடாக, எமது வியாபாரத்தை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதனூடாக சர்வதேச கோழி இறைச்சி சந்தையில் புகழ்பெற்ற வர்த்தக நாமமாகத் திகழும் எமது நோக்கத்தை எய்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும். எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காக Aboitiz குழுமத்துக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதுடன், இந்தக் கொடுக்கல் வாங்கலைப் பூர்த்தி செய்ய உதவியமைக்காக TWCorp க்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
நியு அந்தனீஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “பல காரணிகளைக் கவனத்தில் கொள்கையில் இது உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாக அமைந்துள்ளது. விலங்கு உணவுத் துறையில் எமது நிலையை இந்த கையகப்படுத்தல் மேலும் வலிமைப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனூடாக கோழி இறைச்சியை தடங்கலின்றி விநியோகிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இயங்கவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
நியு அந்தனீஸ் நிறுவனத்தின் அத்திவாரமாக பண்ணையாளர்கள் திகழ்வதுடன், தேசத்துக்கு அவசியமான சரியான புரதச் சத்து கிடைப்பதை இந்தப் பண்ணையாளர்கள் உறுதி செய்கின்றனர். இதன் பெறுபேறாக, நாட்டினுள் எந்தளவில் காணப்பட்டாலும், இந்த விலங்கு உற்பத்தியாளர்களில் நாட்டின் பெருமளவான சனத்தொகை தங்கியுள்ளது. நியு அந்தனீஸ் போன்ற உற்பத்தியாளர்கள் காரணமாக, சூழலுக்கு நட்பான வியாபார செயன்முறைகளை தேசிய மட்டத்தில் முன்னெடுக்கக்கூடியதாகவுள்ளது.
சிறியளவு மற்றும் பாரியளவிலான விலங்கு உற்பத்திக் கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் பணிகளுக்கு நியு அந்தனீஸ் ஆதரவளித்து, பொருளாதார, சமூக மற்றும் சூழல் அடிப்படையில் நிலைபேறான வழிமுறைகளில் கால்நடை பங்களிப்புக்கும் விநியோக சங்கிலித் தொடர் பணிகளையும் அதிகரிக்கச் செய்வதற்கும் ஆதரவளிக்கின்றது.
14 minute ago
22 minute ago
37 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
37 minute ago
51 minute ago