2025 ஜூலை 09, புதன்கிழமை

'பழி வாங்கல் ரீதியான இடமாற்றமே வழங்கப்படுகிறது'

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு பழி வாங்கல் ரீதியான இடமாற்றம் வழங்கப்படுவதாக யாழ். மாவட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இடமாற்றம், இடமாற்ற கொள்கைகளுக்கு முரணானதாகவும் தாபன விதிக்கோவைகளுக்கு புறம்பானதாகவும் உள்ளதாக்க  கூறி, கடந்த டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் பணிப்புறப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் குறித்த தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று யாழ்.சோமசுந்தரம் வீதியிலமைந்துள்ள விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை  (02) யாழ். மாவட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சங்கத் தலைவர் க.சதீஸ் தலமையில் இடம்பெற்றது.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அநீதியான முறையில் வழங்கப்படுகின்ற இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

2014க்கு முன்னர், சீரான முறையில் வழங்கப்பட்டு வந்த இடமாற்றம், 2015 க்கு பின்னரான காலப்பகுதியில் முறையற்ற வகையில் வழங்கப்படுகின்றது.

இடமாற்ற சபையினால் கடந்த வருடம் இடமாற்ற கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. பின்னர், அதே வருடத்தில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கென தனியான இடமாற்ற கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.

இது எந்த மாகாணத்திலும் இல்லாத நடைமுறையாகும். இடமாற்ற கொள்கை ஒன்று தயாரிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தின் ஆலோசனை பெறப்பட வேண்டியது அவசியம்.
ஆனால், இங்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாலும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமலும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினாலும் இடமாற்றம் வழங்கப்படுகின்றது.

யுத்த காலத்திலும் அதற்கு பின்னரும் சிறந்த முறையில் கடமையாற்றி பெரிதளவில் நோய் பாதிப்புக்கள் எவையுமின்றி பொதுமக்களை பாதுகாத்த பொதுப்பரிசோதகர்கள் தற்போது அரசியல் பழி வாங்கல் நோக்கங்களோடு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

வெளிமாவட்டங்களுக்கு கடமைக்கு செல்கின்றவர்கள் குறித்த காலப்பகுதிக்கு பின்னர் தமது சொந்த மாவட்டத்துக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஆனால், புதிய இடமாற்றத்தின் படி 10 வருடங்களுக்கு மேல் சொந்த மாவட்டத்தில் கடமையாற்றியவர்கள் கட்டாயம் வெளிமாவட்டம் செல்ல வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இது உத்தியோகஸ்தர்களின் மனதை பாதிக்கும் நடவடிக்கையாகும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .