2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இருபது வருட அகதி வாழ்க்கைக்கு தீர்வு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது: ப.சத்தியலிங்கம்

Menaka Mookandi   / 2015 மே 01 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரிநிலைய மக்களின் இருபது வருட அகதி வாழ்க்கைக்கு தீர்வு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது  என வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சமூகசேவைகள், புனர்வாழ்வு, சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் மருத்தவர் ப.சத்தியலிங்கம் இன்று (1) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

கடந்த 1994ஆம் ஆண்டில் உள்ளக இடம்பெயர்வினாலும் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுக்குமான நலன்புரி நிலையங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்ட நிலையில் பெருமனவிலானோர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

எனினும் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் நலன்புரி முகாம்கள் இதுவரை மூடப்படாதுள்ளமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும் கடந்த அரசில் அங்கம் வகித்தவர்களும் அவர்களின் கைக்கூலிகளும் இவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எந்தவித உருப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.  அவ்வப்போது தேர்தல் காலவாக்குறுதிகள் மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் முடிவெதுவுமின்றி அனாதரவாக மக்கள் விடப்பட்டனர்.

வடக்கு மாகாண சபை நிறுவப்பட்டபின்னர் மாகாண சபையில் இந்த மக்களை அதேஇடத்தில் காணிகளை வழங்கி குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முன்மொழிவொன்றும் என்னால் முன்வைக்கப்பட்டு இணைத்தலைவர்களால் அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த அரசாங்கத்தில் இதுதொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர் எமது மாகாண அமைச்சர்கள் முதலமைச்சர் தலைமையில் மத்திய மீள்குடியேற்ற அமைச்சரை சந்தித்து இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தோம். அமைச்சர் அவர்களும் இந்த விடயத்தில் கரிசனைகொண்டு அமைச்சின் உயரதிகாரிகளை வவுனியாவிற்கு அனுப்பி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டமொன்றை ஒழுங்குபடுத்தி இந்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் பூந்தோட்டம் நலன்புரிநிலையத்திலுள்ளவர்களையும் வவுனியா வடக்கு சின்னடம்பன் பகுதியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான வீடுகள் லைக்கா ஞானம் நிறுவனத்தினால் கட்டிக்கொடுப்பதற்கு மாவட்ட செயலகத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய மீள்குடியேற்ற அமைச்சரிற்கும் இதற்காக உழைத்த அரசாங்க அதிபர், மாவட்ட செயலக அதிகாரிகள் அனைவருக்கும் மாகாண புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கான மீள்குடியேற்ற உதவிகளையும் தொடர்ந்து வழங்க ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .