2025 ஜூன் 04, புதன்கிழமை

அபிவிருத்திக் குழு கூட்டத்தின் திர்மானத்தை தூக்கி எறிந்த வன இலாகா

க. அகரன்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மீள் குடியேறிய மக்கள் வன இலாகாவினரால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இன்று தூக்கி எறிந்துள்ளனர்.

வவுனியா வடக்கில் பழம்பெரும் கிராமமான காஞ்சிரமோட்டை கிராமம் அதிகளவான மக்கள் வாழ்ந்த பிரதேசமாக காணப்பட்டது. இந்நிலையில், யுத்தம் காரணமாக அங்கிருந்த இடம்பெயர்ந்த மக்கள் இந்தியாவுக்கும் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தனர்.

எனினும் யுத்தம் நிறைவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களும் தாம் பூர்வீகமாக வாழ்ந்த காஞ்சிரமோட்டை கிராமத்தில் குடியேறுவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரியதற்கு இணங்க பிரதேச செயலாளரும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு தமது தரப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகளை வழங்குவதற்கும் அடிக்கல்லும் நாட்டப்பட்டிருந்தது.

சுமார் 45 நாட்களை கடந்தும் மக்கள் தமது காணிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வன வளத்திணைக்களத்தினர் குறித்த காணி வனவளத் திணைக்களத்துக்கு உரியது என தெரிவித்ததுடன் மேற்கொண்டு காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 18 குடும்பங்களுடன் உள்ளூரில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய குடும்பங்களுமாக 35 குடும்பங்கள் இக்கிராமத்தில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன இலாகாவினருக்கம் இணைத் தலைவர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன் மனச்சாட்சியுடன் வன இலாகாவினரை நடக்குமாறும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து செயற்படுமாறும் கோரப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளருடன் வன இலாகா அதிகாரி முரண்பட்டுக்கொண்ட நிலையில் வனவளத் திணைக்களத்தின் தலைமை அதிகாரிக்கு அனுமதிக்காக கடிதம் அனுப்புமாறும் தெரிவித்தார்.

இந்நிலையில், வட மாகாண முதலமைச்சரும் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் வன இலாகா அதிகாரிகளிடம் குறித்த கிராமத்தில் மக்கள் மீளக்குடியேறியுள்ளமையால் அவர்கள் தாம் வாழ்வதற்கான அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் கடிதத்தை பிரதேச செயலாளர் அனுப்பி பதில் வரும்வரை காத்திருக்க முடியாது எனவும் தெரிவித்ததுடன் இதனை அபிவிருத்திகுழுவில் தீர்மானமாகவும் கொண்டு வந்திருந்தார்.

இதற்கு அபிவிருத்திகுழு கூட்டத்தில் சம்மதம் தெரிவித்த வன இலாகாவினர் இன்று பிரதேச செயலாளருடன் காஞ்சிரமோட்டை கிராமத்துக்குச் சென்று எவ்வித காணி துப்பரவுப் பணிகளோ வீடுகளை அமைக்கும் பணிகளையோ செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வீடுகளை அமைப்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்த மீளக்குடியேறிய மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் மழை காலம் வருவதற்கு முன்னர் தாம் விடுகளை அமைத்து பாதுகாப்பாக வாழலாம் என எண்ணி இருக்கும்போது இவ்வாறான நிலை ஏற்ட்டுள்ளதாகவும் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கூட்டமும் பயனற்றதா என்ற கேள்வியையும் மீள்குடியேறிய மக்கள் எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .