2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 17 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற பஸ்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலைஊழியரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பாடசாலை வரும்போதும் மீள, வீடு திரும்பும்போதும் பஸ்கள் அவர்களை ஏற்றாமல் செல்வதால், கல்வி நடவடிக்கைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புகளிடமும் முறையிட்டும் வீதியை மறித்து போராட்டம் செய்தும், இதுவரை சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலை காணப்படுகிறது.

இதன் பின்னணியில், பாடசாலை மாணவர்கள் பருவகால சீட்டுகளைப் பெற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் ஏற்றாமல் செல்லும் நிலை தொடர்வதால், மாணவர்கள் பாடசாலை செல்லவும் மீண்டும் வீடு திரும்பவும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை (13) பாடசாலையில் பரீட்சை நடைபெற்ற நிலையில், மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில், வீதியில் அந்தரித்து நின்றுள்ளனர். மாங்குளம் பொலிஸாருக்கு ஊடகவியலாளர் ஊடாக இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, போக்குவரத்து பொலிஸார் ஒருவர் வரவழைக்கப்பட்டு,  காலை 8.12 மணிக்கு வீதியில் வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான, யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ் மறிக்கப்பட்டு, மாணவர்கள் ஏற்றி விடப்பட்டனர்.

இதன்போது பொலிஸாருடன் குறித்த சாரதி தர்க்கப்பட்டதோடு, குறிப்பிட்ட இடத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருடனும் தகர்க்கப்பட்டு, அச்சுறுத்தி சென்றிருந்தார்.

இதன் பின்னணியில், 15.03.2023 அன்று இரவு 20.47 மணிக்கு  ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு தொடர்பை ஏற்படுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை ஊழியர் ஒருவர், ஊடகவியலாளரை  கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், வியாழக்கிழமை (16) மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ஊடகவியலாளர் தமது உத்தியோக கடமையில் ஈடுபடுவதற்கு தடையை ஏற்படுத்தியதுடன், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரி, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு உரிய தரப்புகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .