2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சர்வமத பேரவையிலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மார்ச் 04 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து, மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறவுள்ளதாக, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அறிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்குள் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவின் புனரமைப்பு வேலைகளுக்கு, நேற்று (03) சிலர் இடையூறு விளைவித்தமையால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வளைவு, வேற்று மத மக்களால் பிடுங்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் சைவத்தமிழ் மக்களுக்கு தாங்கொணா கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், மேற்படி சம்பவம் மிகுந்த மன வேதனையை தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையிலிருந்து செயற்பட விருப்பமில்லாத காரணத்தால் இந்து குருமார் பேரவையில் உள்ள இந்து குருமார்கள் வெளியேறிக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, நாளை மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனிகள் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது இரு மதத்தினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .