Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிறைகளில் தடுத்த வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளின் விடுதலைக்கான காலங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்து உண்மையான நல்லாட்சியை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில், சிறைகளில் இருக்கும் தமது உறவுகளையும் ஒன்றிணைத்து சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது. அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தடுத்து வைக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர், விசாரணை அதிகாரிகளால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட, உண்மைக்கு மாறான குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களில், அந்த அதிகாரிகளின் வற்புறுத்தலினாலும் விடுதலை செய்வதாக கூறியும் பெறப்பட்ட ஒப்பங்களை அடிப்படையாக வைத்தே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழக்கும் 1 முதல் 2 மாதங்கள் வரை தவணையிடப்படும்போது, அங்கு நீதவான்கள், அரச சட்டத்தரணி அல்லது சாட்சியாளர்கள் வருவதில்லை. ஆயினும் எமது உறவுகள், சட்ட தரணிகளுக்கு எதுவிதமான நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி பணத்தை மட்டும் தொடர்ந்தும் வழங்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்த நிலையில் பலருடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகள் பல வருடங்களாக திகதியிடப்பட்டு 10 முதல் 15-18 வருடங்களையும் அண்மித்து விட்டது. எனவே, இனியும் நீதிமன்றங்கள் ஊடாக எமது உறவுகளின் விடுதலையை எதிர்பார்ப்பதென்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்முறையாகும்.
எனவே, எமது உறவுகளின் உடனடி விடுதலைக்கான ஆக்கபூர்வமான செயல்முறையொன்று நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம்.
மாறாக பொய் வாக்குறுதிகள் மூலம் நாம் ஏமாற்றப்பட்டால் சிறைகளில் இருக்கும் எமது உறவுகளையும் ஒன்றிணைத்து சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். எனவே தங்களின் மேலான கவனத்துக்கு எமது நியாயமான பிரச்சினைகளை கொண்டு வருவதன் ஊடாக, தங்களின் காத்திரமான நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்' என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
27 minute ago