2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

வியப்பேற்படுத்தும் வகையில் உடலை வளைக்கும் 80 வயது நபர்

Kogilavani   / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

80 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது உடலை சிறப்பாக வளைக்கும் திறமையை கொண்டுள்ளார். இவர் தனது கால்கள் இரண்டையும் கழுத்திற்கு மேலாக இலகுவாக வளைத்தெடுக்கின்றார்.

சீனாவின் தென் பிராந்தியத்திலுள்ள சாங்ஸ்ஸோ பகுதியில் வசித்து வரும் சென் டோரோங் எனும் வயோதிபரே இவ்வாறு 80 வயதிலும் தனது உடலை வளைக்கும் திறமையைக் கொண்டு விளங்குகின்றார்.

இவர் 12 வருடங்களுக்கு முன் முதுகு வலி ஏற்பட்டபோது அதனை தவிர்த்துக் கொள்வதற்காக வீட்டில் இந்த பயிற்சியை ஆரம்பித்தாராம்.

சென் இது குறித்து விபரிக்கையில்,  எனக்கு முள்ளந்தண்டு வலியேற்பட்டது. அதற்கு சிகிச்சை இல்லை. அக்குபங்சர், மசாஜ், தியானம் என பலவற்றை பரீட்சித்தேன். பலன் கிடைக்கவில்லை.  இந்த முள்ளந்தண்டு வலியால் இரவில் உறங்காமல் இருந்தேன்.

ஒரு முறை அக்ரோபெடிக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கும் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் யோசனை எழுந்தது.

அந்தக் காட்சியில் தோன்றியவர்கள் பல்வேறு பயிற்சிகளை செய்து காட்டினார்கள். அவர்களால் பல்வேறு வகைகளில் அவர்களது உடலை பின்னால் வளைக்க முடிந்தது. இந்த பயிற்சியால் முள்ளந்தண்டு வலியிலிருந்து நீங்க முடியுமென்று நான் நினைத்தேன்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் பின்பு அவர் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். 'நான் இப் பயிற்சியை மேற்கொண்ட அதே வருடத்தில் முள்ளந்தண்டு வலி நீங்கியது.  எனது மெல்லிய உடல் தன்மையால் சிறந்த நலனை பெற்றேன்' என்று அவர் கூறுகிறார்.

கால்களை கழுத்தில் சுற்றி வளைத்துக் கொண்டு சென்னால் நாற்காலியில் அமர முடியும். அல்லது ஒரு காலை தலையணையாக வைத்துக்கொண்டு அவரால் தூங்க முடியும்.

தற்போது சென், அதிகாலை 5 மணிக்கு எழுந்து ஒரு மணித்தியாலம் உடற்பயிற்சியை செய்கின்றார். பின்பு அவர் மாலைவேளையில் 2 கிலோமீற்றர் தூரம் ஓடுதல் அல்லது 20 கிலோமீற்றர் சைக்கிளோட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

'எனக்கு  எனது நோயை குணப்படுத்திக்கொள்ள மட்டுமே இந்த உடற்பயிற்சி அவசியமாக இருந்தது. சிறப்பாக உடலை வளைக்கும் ஆற்றல் கொண்ட நபராக விளங்கவேண்டும் என நான் எண்ணியதில்லை. ஆனால்,  தற்போது நான் ஆரோக்கியமான மற்றும் சக்திவாய்ந்த உடலை கொண்டுள்ளேன். என்னால் 100 வயது வரை வாழ முடியும் என உணர்கிறேன்' என்கிறார் சென்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .