2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

’’ உடனடி நிவாரண பொதியை வழங்கு’’

Janu   / 2026 மார்ச் 31 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடனடியாக நிவாரண பொதியை வழங்குமாறும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"துன்பப்படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொதி (Relief Package) ஒன்றை பெற்றுக்கொடுங்கள்; இதற்கு எதிர்க்கட்சியாகிய நாம் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம்" என சஜித் பிரேமதாச யோசனை முன்வைத்துள்ளார். எண்ணெய் மற்றும் மின்சார விலைகளை குறைக்க அரசாங்கம் எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு வருமான வழிகளைப் பாதித்து, தொழில் முயற்சிகளைச் சரிவடையச் செய்துள்ளது. அத்துடன், உற்பத்தி மற்றும் சேவைச் சங்கிலிகள் முடங்கியுள்ளன.

தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நுரைச்சோலை மின்நிலையத்தில் உற்பத்தித்திறன் 147 மெகாவோட் வரை குறைந்துள்ளது.

எரிபொருள் விலை மற்றும் மின்கட்டண உயர்வால் வாழ்க்கைச்செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச்சுழற்சி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான வழிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டு மக்கள் ஒரு 'மரணப்பொறியில்' சிக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.

  • எரிபொருள் விலை மற்றும் மின்கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் திறைசேரியில் இருப்பதாகக் கூறும் மேலதிகக் கையிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அரசாங்கத்தின் மெத்தனப்போக்கினால் மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள், உரம் மற்றும் எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத்தரப்பினரும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. மாறாக, அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்து, மக்களுக்குச் சாதகமான விதிமுறைகளை உள்ளடக்கி 'மானுடமயமாக்கப்பட்ட' ஒப்பந்தமாக அதனை மாற்ற வேண்டும். இதுவே அரசாங்கம் மக்களுடன் செய்துகொண்ட சமூக உடன்படிக்கையாகும். அஞ்சாமல் IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது. நாடு மேலும் ஒரு அமைதியின்மையை நோக்கிச் செல்லாமல் தடுக்க, அரசாங்கம் இப்போதாவது உறக்கத்திலிருந்து விழித்து, விரைவான நிவாரணத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .