2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

உயர் ரக முந்திரி பருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகளை 'கியூ' பிரிவு பொலிஸார் புதன்கிழமை (26) பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலைகள், கடல் அட்டை மற்றும் மஞ்சள் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  'கியூ' பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட முந்திரிப் பருப்பு மூட்டைகளைப் படகில் ஏற்றிக் கொண்டிருந்த போது, சுற்றிவளைத்ததுடன் இதன்போது இருவர் கடலில் குதித்து தப்பி ஓடிய நிலையில், அங்கிருந்த மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்புகள்   கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய ஏனைய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .