Thipaan / 2016 ஜூலை 23 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், குமாரபுரம் கிராமத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி சுதர்சன டீ சில்வா, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்னவிடம், நேற்று வெள்ளிக்கிழமை (22) கோரிக்கை விடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
26 பேர் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் மன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டு வரும் இராணுவத்தின் 6 உறுப்பினர்களுக்கே மரணதண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கின் சாட்சியங்களுக்கு ஏற்ப, முன்னாள் இராணுவ உறுப்பினர்களே இந்தக் கொலைகளை மேற்கொண்டமைக்கான நியாயமான சாட்சியங்கள் சந்தேகமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மன்றில் சுட்டிக்காட்டினார்.
முறைப்பாட்டாளர் சார்பில் வாய்மொழி மூலம் விடயங்களை எடுத்துக்கூறும் போதே, சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குற்றம் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களில் சிலமாறுபாடுகள் ஏற்படலாம் என மன்றில் சுட்டிக்காட்டிய அவர், சாட்சியங்களில் காணப்படும் மாறுபடுகள் அல்லது மாற்றங்கள் பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால், தனித்தனியாக 121 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் இம் மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூரிகள் சபை முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
திருகோணமலை, தெஹிவத்த இராணுவ முகாமில் குறித்த சந்தேக நபர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் மூதூர், கிளிவெட்டி குமாரபுரத்தில் இந்தக் கொலை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் சாட்சி விசாரணைகள் கடந்த 27.06.2016 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 11 நாட்கள் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக பார்வையிட்ட கிராம மக்கள் சாட்சியங்களை வழங்கியிருந்தனர். அவர்கள், குறித்த இராணுவத்தினரை அடையாளமும் காட்டியிருந்தமை குறிப்பிடத்தகது.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026