Editorial / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி, செவ்வாய்க்கிழமை (09) பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக நேபாளம் திகழ்கிறது.
அந்நாட்டின் சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த சூழலில் பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக 28 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செவ்வாய்க்கிழமை (09) முன்தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நேபாளம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (09) தீ வைத்தனர்.
நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றார். இந்த சூழலில் பிரதமர் சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை (09) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காத்மாண்டுவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா, அமைச்சர் பிருத்வி உட்பட மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (09) தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவை ஒரு தரப்பினர் அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார். நேபாள நிதித் துறை அமைச்சர் விஷ்ணு பவுடாலை, போராட்டக்காரர்கள் காத்மாண்டின் பிரதான தெருவில் ஓடவிட்டு அடித்து உதைத்தனர்.
நேபாள முன்னாள் பிரதமர் சாலாநாத் கனாலின் வீடு காத்மாண் டுவில் உள்ளது. அந்த வீட்டை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (09) தீ வைத்து எரித்தனர். இதில் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார்.உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்
இந்தியர் உயிரிழப்பு: பிஹார் மாநிலத்தை ஒட்டி நேபாளத்தின் பிரத் நகர் அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை (09) வாகனங்களுக்கு தீ வைத்தனர். அப்போது இந்திய லாரி ஓட்டுநர் காகர்பிட்டா என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை (09) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேபாளத்தின் நிலவரத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
போராட்டத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இப்போதைக்கு இந்தியர்கள் யாரும் நேபாளத்துக்கு செல்ல வேண்டாம். நேபாளத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
புதிய பிரதமர் பலேந்திர ஷா? - நேபாள தலைநகர் காத்மாண்டுவை சேர்ந்தவர் பலேந்திர ஷா (35). எம்.டெக் பட்டம் பெற்றுள்ள இவர், ஆரம்பத்தில் ராப் பாடகராக இருந்தார். பல்வேறு ராப் இசை ஆல்பங்களை வெளியிட்டார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். இதன்மூலம் நேபாளத்தின் இளம் தலைமுறையினரிடம் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காத்மாண்டு நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பலேந்திர ஷா சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் நேபாள காங்கிரஸ், சிபிஎன் (யுஎம்எல்) கட்சிகளின் வேட்பாளர்களை அவர் தோற்கடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் காத்மாண்டு மேயராக அவர் பதவி வகித்து வருகிறார்.
ஆரம்பம் முதலே நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கும், மேயர் பலேந்திர ஷாவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. கடந்த ஆண்டு காத்மாண்டு மாநகராட்சியின் ஊழியர்களுக்கு சுமார் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அப்போது பிரதமருக்கும் மேயருக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இளம் தலைமுறையினர் காத்மாண்டு சாலை, தெருக்களில் திரண்டனர். அவர்களின் போராட்டத்துக்கு மேயர் பலேந்திர ஷா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். நேபாளத்தின் புதிய பிரதமராக பலேந்திர ஷா பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .