2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சென்ரல், ஜொனியன்ஸ், கே.சி.சி.சி அணிகள் வெற்றி

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


- குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஆட்டங்களில் சென்ரல், ஜொனியன்ஸ், மற்றும் கே.சி.சி.சி. அணிகள் வெற்றிபெற்றன.

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகள் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்கு பற்றும் இச்சுற்றுப்போட்டியின் முதற்சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று வியாழக்கிழமை (13) மூன்று ஆட்டங்கள் இடம்பெற்றன.

முதலாவது போட்டியில் ஜொனியன்ஸ் அணியினை எதிர்த்து அரியாலை மத்தி அணி மோதியது. இந்தப் போட்டி ஜொனியன்ஸ் அணியின் காலிறுதி வாய்ப்பினைத் தக்க வைக்கும் போட்டியாக அமைந்திருந்தது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை மத்தி அணி 20 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.ஜெருசன் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக என்.கானாமிர்தன் 3, எஸ்.லவேந்திரா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

113 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜொனியன்ஸ் அணி, மிகுந்த போராட்டத்தின் மத்தியில் 17.5 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.அன்புஜன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அரியாலை மத்தி அணி சார்பாக என்.சதீஸ் 3, எஸ்.ஜெருசன் 2 இலக்குகளையும் கைப்பற்றினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்கரராக என்.கானாமிர்தன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் யாழ்;.சென்ரல் அணியினை எதிர்த்து பற்றீசியன் அணி மோதியது.  நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன் அணி, 19.2 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எல்.லிவிங்டன் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்ரல் அணி சார்பாக எம்.றொகான், வி.றஜீவ்குமார் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள். 80 என்ற வெற்றியிலக்கினை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்ரல் அணி 19 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.கலிஸ்ரன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பற்றீசியன் சார்பாக எம்.நோபேர்ட் 3, எல்.லிவிங்கடன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக எம்.றொகான் தெரிவு செய்யப்பட்டார்.


மூன்றாவது போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணியினை எதிர்த்து ஸ்ரான்லி விளையாட்டுக்கழக அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கே.சி.சி.சி அணி, ஜெயரூபனின் அதிடியான ஆரம்பத் துடுப்பாட்டத்தின் மூலம் 20 பந்தபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது. 

துடுப்பாட்டத்தில் ஏ.ஜெயரூபன் 43 (6 ஆறு ஓட்டங்கள்), எஸ்.சிலோஜன் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்ரான்லி அணி சார்பாக எஸ்.உதயசுபாஸ்கர் 3, எம்.துஸியந்தன், என்.இனோஜன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

164 என்ற வெற்றியிலக்கினை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரான்லி அணி, 15.5 பந்துபரிமாற்றங்களில் 79 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.சுதர்சன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கே.சி.சி.சி அணி சார்பாக எஸ்.இராகுலன், என்பவிதரன் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.ஜெயரூபன் தெரிவு செய்யப்பட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .