2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வெலிக்கடையிலிருந்து வவுனியாவுக்கு தமிழினி மாற்றப்பட்ட கதை

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(30.06.2012 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் பத்திரிகைக்காக டி.பி.எஸ்.ஜெயராஜ்  எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

                                                                                                                         பாகம் 1
சிவசுப்பிரமணியம் சிவகாமி அல்லது தமிழினி - வெலிக்கடையிலுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஜூன் 26ஆம் திகதி மாற்றப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் அரசியல் பிரிவு பொறுப்பாளரான இவர், ஜூன் 22ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிபதி ரஷ்மி சிங்கப்புலியின் கட்டளைப்படியே மாற்றப்பட்டார்.

பூந்தோட்டம் பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் குறிப்பிட்டகாலம் புனர்வாழ்வுக்கு உள்ளாகிய பின் தமிழினி ஒரு கட்டத்தில் விடுதலை பெறவுள்ளதையே இந்த இடமாற்றம் கட்டியம் கூறுவதாகத் தெரிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கேணல் தரத்திலிருந்த அதிசிரேஷ்ட முக்கிய பெண் உறுப்பினரான 40 வயதுள்ள தமிழினி, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் மகளிர் அணிப் பொறுப்பாளராக தமிழினி இருந்தார். இதன்படி அவர் விடுதலை புலிகளின் ஆண் அரசியல் பொறுப்பாளராகவிருந்த நடேசனுக்கு சமமாக காணப்பட்டார்.

மாலதி படைப்பிரிவின் தளபதியாகவிருந்த கந்தையா ஞானபூரணி அல்லது விதுஷா மற்றும் சோதியா படைப்பிரிவின் தளபதி கலைச்செல்வி பொன்னுத்துரை அல்லது துர்க்கா ஆகியோருடன் தமிழினி சேர்ந்து யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலை புலிகளின் முக்கிய பெண் போராளிகளில் அதிமுக்கியத்துவம் பெற்ற மூவரில் ஒருவரானார். விதுஷா - தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் 1986 இலும் துர்க்கா 1989 இலும் இணைந்துகொண்டனர்.

பூந்தோட்டத்துக்கு தமிழினி மாற்றப்பட்டமை அவர் பூரண விடுதலை பெறுவதற்கான சகுனமாக கருதப்படுகிறது. அவர் பூந்தோட்டத்தில் குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி பெறுவார் எனவும் அதன்பின் சுதந்திர பறவைகளின் முன்னாள் உறுப்பினரான இவர், சுதந்திர பறவையாக விடுவிக்கப்படும் சாத்தியம் தெரிகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் விடுதலை  பற்றிய சிக்கலான பிரச்சினையில் அரசாங்கம் பாராட்டும் வகையில் கடைப்பிடிக்கும் நெகிழ்ச்சி தன்மையை வெளிப்படுத்துவதால் தமிழினி தொடர்பான நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழீழ விடுதலை புலிகளுடன் சேர்ந்திருந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் மேலும் மேலும் விடுவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த நிகழ்வு இருக்கக்கூடும் என்பது இதற்கு முக்கியத்துவம் சேர்க்கின்றது.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருத்தல், முன்னாள் புலி உறுப்பினர்களை சிறையிடுதல் என்பன முக்கியம் வாய்ந்த பிரச்சினைகளாகி உள்ள நிலையில், புலி இயக்கத்தில் தமிழினியின் பாத்திரம், அவர் பிடிபட்டமை, தடுப்புக்காவல், தொடர்ந்து வந்த இடமாற்றம், எதிர்பார்க்கப்படும் அவரது விடுதலை என்பன தற்போது காணப்படும் நிலைமையை விளக்கிக் கொள்ள செய்துள்ளது.

இப்போது காணப்படும் நிலைமையின் மனிதாபிமான பரிமாணத்தை தமிழினியின் நிலைமை எடுத்துக்காட்டுகின்றது. இது நல்ல முறையில் கையாளப்படுவது பிரச்சினைகளை மோதல் வழியிலன்றி ஒத்துழைப்பு வழியில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை காட்டுவதாக உள்ளது.

தமிழினியை விடுதலையின் வாசல்படி அளவுக்கு இட்டுச் சென்றுள்ள நிகழ்ச்சி தொடர்புகளை இக்கட்டுரை ஆசிரியர் தொலைதூரத்திலிருந்த போதும் அறிந்து வைத்துள்ளார். இது சொல்லப்பட வேண்டிய ஒரு கதையாகும்.

பரந்தன்

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி 1972, ஏப்ரல் 23இல் பரந்தனில் பிறந்தார்.  இவரது குடும்பம் யாழ்ப்பாண அடியை கொண்டிருந்த போதும் பரந்தனில் குடியேறியது. பின்னர் கிளிநொச்சி, உதயநகரிலுள்ள கனகபுரம் வீதியிலிருந்த ஒரு வீட்டில் வாழ்ந்தனர். தாய், திருமணமாகிய இரண்டு சகோதரிகள் - இவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் ஆவர். சகோதரிகளில் ஒருவர் நோர்வேயில் உள்ளார். மற்றவர் தாயாருடன் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றார். இவரது இன்னுமொரு சகோதரி விடுதலை புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்தார். இவர் 1998 இல் பரந்தனில் நடந்த சத்ஜய-2 இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.

சிவகாமி சுப்பிரமணியம் க.பொ.த. (சா.த) வரை பரந்தன் இந்து கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் க.பொ.த. (உயர்தரம்) படிப்பதற்காக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் சேர்ந்தார்.

புலி ஆட்சேர்ப்பாளர்கள் பாடசாலைக்கு வந்து நடத்திய பிரசாரத்தினால் கவரப்பட்ட இவர், புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். இவர் 1991 ஜூலை 27இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முறையாக இணைந்துகொண்டார். யாழ். குடாநாட்டில் கிளாலி மற்றும் நீர்வேலியிலிருந்த  புலிகளின் தளத்தில் இவர் தனது பயிற்சியை பெற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இலக்கம் 1736 ஆகும். சிவகாமி தனது இயக்கப் பெயரை தமிழினி என வைத்துக்கொண்டார். இவர் குடாநாட்டின் வலிகாமம் பிரதேசத்தில் பல இடங்களில் கடமையிலிருந்துள்ளார்.

பின்னர் இவர் கிளிநொச்சி, கிளாலி பகுதிகளுக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் தமிழினி - தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் தொழிற்பட்டார். அப்போது அவர் பல சிறு தாக்குதல்களில் பங்குபற்றினார். செப்டெம்பர் 1993இல் ஆனையிறவிலிருந்து முன்னேறிய இராணுவம் கிளாலியை பிடிக்க முயன்ற “யாழ்தேவி“  நடவடிக்கைதான் அவரது முதலாவது பெரிய யுத்த அனுபவமாகியது. பூநகரி, நாகதேவன்துறை முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நவம்பர் 1993 இல் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையிலும் இவர் பங்குபற்றினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூநகரி இராணுவத்திடமிருந்து ரி – 55 யுத்த டாங்கி ஓன்றை கைப்பற்றியது. அப்போது கைப்பற்றப்பட்ட தளபாடங்களை கடத்திக்கொண்டு செல்லும் அணியில் தமிழினி கடமையிலிருந்தார். கைப்பற்றப்பட்ட ரி- 55 டாங்கியை விரைந்து கடத்துவதற்கான பாதையொன்றை காட்டுப் பிரதேசத்திற்கு ஊடாக அவர்கள் அமைக்க வேண்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் தமிழினியுடன் பேசிய பின் தமிழினியால் கவரப்பட்டு தமிழினியை அரசியல் பிரிவுக்குள் உள்வாங்கினர். தமிழினி பெண்களால் நடத்தப்பட்ட ஒரு தும்புத் தொழிற்சாலை மற்றும் விவசாயப் பண்ணை என்பவற்றுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் சஞ்சிகையான சுதந்திர பறவைகளின் ஆசிரியர் பீடத்தின் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டார். அடேல் பாலசிங்கத்தின் செல்வாக்கினுள் வந்த தமிழினி ஒரு பெண்ணியவாதியானார்.

இராணுவத்தால் 1995 -96 இல் வெற்றிகரமாக நடத்தப்பட்ட றிவிரெச நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக வன்னிக்கு இடம்பெயர்ந்தது. தமிழினி தொடர்ந்தும் அரசியல் பிரிவில் வேலை செய்தார். ஆயினும் 1997 - 1998 இல் இராணுவம் வன்னியை கைப்பற்ற ஜெயசிக்குரு நடவடிக்கையை தொடக்கிய பின், தமிழினி யுத்த அலகுகளில் சேரவேண்டியிருந்தது. அவர் மாங்குளம் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அவர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இவர்களுக்கு சமைத்த உணவு பெற முடியாமல் போனபோது, பல நாட்களாக காட்டுப் பழங்களை சாப்பிட்டு உயிர்வாழ வேண்டியிருந்தது.

பாலசிங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரின் மனதில் தமிழினி இடம்பிடித்துக்கொண்டார். இதனால் இவரால் விரைவாக தனது பதவி நிலையை உயர்த்திக்கொள்ள முடிந்தது.
காலகதியில் இவர் ஜூன் 2000இல் பெண்கள் பிரிவு அரசியல் தலைவராகினார். இராணுவம் ஆணையிறவை மீண்டும் கைப்பற்றுவதற்காக 2001இல் அக்னி சுவாலை இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது தமிழினி தாக்குதலில் ஈடுபட வேண்டியிருந்தது.

கிளிநொச்சி

ஒஸ்லோ அனுசரணையுடன் பெப்ரவரி 2002 இல் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒரு நிரந்தர அரசியல் செயலகத்தை அமைத்துக்கொண்டனர். தமிழினி தீவிர பெண்ணியவாதியாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பினுள் சமத்துவத்துக்காக போராடி சில வெற்றிகளை பெற்றுக்கொண்டார். முன்பு பெண்கள் அரசியல் பிரிவு பிரதான அரசியல் பிரிவின் ஒரு பகுதியாகவே இருந்தது. தமிழினி - பெண்கள் அரசியல் பிரிவின் சுயாதீனத்தை போராடிப் பெற்றுக்கொண்டார். அத்துடன், இவர் அந்தஸ்தின் அடையாளங்களான டபிள்கெப் தொடரணி வாகனங்கள், மெய்ப் பாதுகாவலர்கள் என்பவற்றையும் பெற்றுக்கொண்டார்.

யுத்த நிறுத்த காலம் தமிழினி பல வகையிலும் தனது பார்வையை விசாலித்துக்கொள்ள உதவியது. அவர் பெண்கள் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பில் நடந்த கருத்தரங்குகளில் பங்குபெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் அணிக்கு தலைமை தாங்கிச் சென்றார்.

அவர் 2003 மற்றும் 2005இல் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களிலும் உறுப்பினராக இருந்தார். ஐரோப்பாவிலிருந்தபோது தமிழினி பல புலம்பெயர்ந்தோர் குழுக்களுடன் தொடர்புகொண்டிருந்தார். அவர் பல கூட்டங்களில் பேசினார். அவரது பேச்சு சபையோரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில்தான் தமிழினிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்குமிடையில் காதலுணர்வு மலர்ந்தது. இவரை இனி நான் 'கே' என குறிப்பிடுவேன். பிரபாகரன் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை சோடியாக்கி திருமணம் செய்துவைத்தபோது தமிழினி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். 

அவர்களிடையே பரஸ்பர கவர்ச்சியும் குறைந்தபட்சம் சிறிது காதலும் காணப்பட்டது. கேயும் வன்னிக்கும் வந்துவிட்டார். அவர் கிளிநொச்சியில் சில காலம் வாழ்ந்தார். இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் வெடித்தது. அது கடுமையாயிற்று. மெதுவாக நிதானமாக இராணுவம் முன்னேறியது. தமிழீழ விடுதலை புலிகள் பின்வாங்கினர். இறுதியாக முல்லைத்தீவில் கடலை அண்டிய முள்ளிவாய்க்கால் எனும் ஒடுங்கிய நிலப்பரப்பில் புலிகள் அடைக்கப்பட்டனர்.

புலிகளின் வட பிரதேச தளபதியான தீபன் கொல்லப்பட்ட 2009 ஏப்ரல் 4 – 5இல் நடந்த ஆனந்தபுரம் சண்டையின் போது யுத்தத்தின் முடிவு எப்படி அமையும் என்பது தெளிவாயிற்று.

பெண் தளபதியான விதுஷாவும் துர்க்காவும் இந்த போரில்தான் கொல்லப்பட்டனர். தமிழினியும் இந்த யுத்தத்தில் பங்கேற்றார். போரில் இறந்ததாக கருதப்பட்ட இவர் உயிரோடு இருப்பது பின்னர் தெரியவந்தது.

தனது நெருங்கிய தோழியர்களான விதுஷா, துர்க்கா ஆகியோரின் மரணத்தினால் தமிழினி நொடிந்து போனார். தோல்வி நிச்சயம் என்பதனை அவர் கண்டுகொண்ட போதிலும் இயக்கத்தின் மீதான விசுவாசம் காரணமாக முற்றுகையிடப்பட்டிருந்த புதுமாத்தளனில் தங்கியிருந்தார்.

வவுனியா

2009 மே நடுப்பகுதியில் யுத்தம் முடிவை நெருங்கிவிட்டபோது அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று சரணடைய விரும்பியவர்களை போகவிட வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்பட்டது. தமிழினையும் அவரது சகோதரியையும் கூட மே 15 இவ்வாறே செய்தனர்.

தமிழினி அவரது ஆயுதம், சீருடை, அடையாள அட்டை மற்றும் சயனைட் குப்பி ஆகியவற்றை எறிந்து விட்டு தனது குடும்பத்தினருடன், பெருந்திரளாக அரசாங்க பகுதிக்கு சென்றுகொண்டிருந்த மக்களுடன் கலந்துகொண்டனர். அவர்கள் புலிகள் அல்லாத பொதுமக்கள் என ஏற்கப்பட்டு 2009 மே 20இல் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் இவர்கள் நலன்புரி முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

ஆனால், மிகவும் பிரபலமான தமிழினி, முகாமிலிருந்தவர்களினால் விரைவில் இனங்காணப்பட்டார். அதிகாரிகளுக்கு ரகசிய தகவலும் வழங்கப்பட்டது. தமிழினி 2009 மே 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸ் புலனாய்வு பிரிவினராலும் தேசிய மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினராலும் விசாரிக்கப்பட்டார்.

இவர் பின்னர் 2009 ஜூன் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் பிரதான நீதவான் நிசாந்த ஹப்புவாராய்ச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். தமிழீழ விடுதலை புலிகளுடன் இருந்த போது இவரது நடவடிக்கைகள் பற்றி ஆரம்பக்கட்ட அறிக்கையொன்றை அதிகாரிகள் சமர்ப்பித்தனர்.

இவரை மேலும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்ட போது 2009 ஜூலை 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றம் கொண்டு வரும்படி பிரதான நீதவான் கட்டளை பிறப்பித்தார். இதனால் மேலும் இரண்டு வார அவகாசம் கொடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் அரசியல் பொறுப்பாளருக்கு நியாயமான பாதுகாப்பை உறுதி செய்வதில் நீதிமன்றத்தினால் பாராட்டும் வகையில் காட்டப்பட்ட ஈடுபாடும் அக்கறையும் தமிழினியின் அனுபவத்தில் முக்கிய அம்சமாகும்.

தமிழினி நன்கு நடத்தப்படுகின்றாரா, தடுத்து வைப்பதற்கான தேவை உண்மையில் காணப்படுகின்றதா என்பவற்றை நீதிமன்றம் நிச்சயப்படுத்துவதில் உறுதியாக இருந்தது. கொழும்பு பிரதான முன்னாள் நீதவான் ஹப்புவாராச்சி அவசர கால சட்டத்தின் கீழ் தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி 2009 ஓகஸ்ட் 5ஆம் திகதி நேரில் குற்றப்புலனாய்வு பிரிவின் தலைமையகத்திற்கு சென்று நிலைமையை அவதானித்த பின்னரே தடுத்துவைக்க மேலும் காலம் வழங்கினார்.

இவரும் தற்போதைய கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலியும் அதிகாரிகளுக்கு விசாரணையை முடிப்பதற்கு குறுகிய காலமே வழங்கினார்கள். இவ்வாறு செய்தமையினாலேயே நீண்ட காலமாக பொலிஸ் தடுப்பில் வைத்திருக்கும் போக்கை கட்டுப்படுத்தினர்.

விசாரணைகள் முடிந்து தமிழினியின் கோவை சட்டமா அதிபரின் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் அவர் பாதுகாப்பு தடுப்பில் வைக்கப்பட்டார். முன்னைய பல வழக்குகள் போல தமிழினியின் வழக்கும் கிடப்பிலிடப்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் குறுகிய தவணைகளை தொடர்ந்து வழங்கியது.

அவர் ஒரு டசினுக்கு மேற்பட்ட தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்து இழுத்தடித்தது. இதற்கு பாதுகாப்பு நிறுவனத்திற்கு திடமான நோக்கம் இல்லாது இருந்தமையே காரணமாகும்.

புலன் விசாரணைகள்

தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பற்றிய விசாரணைகளை மேற்பார்வை செய்ய வந்த பாதுகாப்பு அமைச்சு, இவர்கள் தொடர்பில் இரண்டு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது.

ஒவ்வொரு வழக்கும் அதன் இயல்புகளுக்கு ஏற்ப தனியாக ஆராயப்பட்டது. இவை இதனடிப்படையில் வன்மை, மென்மை என வகைப்படுத்தப்பட்டன. தமது வன்முறை தொடர்பில் மன வருத்தம் இல்லாதோர், கரும்புலி தற்கொலை சத்திய பிரமாணம் எடுத்தோர், கொடூரமான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டோர் ஆகியோர் வன்மை என கருதப்பட்டனர்.

நேரடியாக போரில் மட்டும் பங்குபற்றியோர் மென்மை என கருதப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களில் 1235 பேர் வன்மை என வகைப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் பூஸா உட்பட மூன்று வெவ்வேறு தடுப்பு நிலையங்களில் வைக்கப்பட்டனர். 11,989 பேர் மென்மை என வகைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்கள் 18இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு தொகுதி தொகுதியாக வெவ்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர். மென்மை வகையினர் மேலும் மேலும் விடுவிக்கப்படும் போது நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டன. புனர்வாழ்வு அமைச்சின் தகவல்படி, மருதமடு, வெலிகந்தை, கண்டல்காடு, பூந்தோட்டம் ஆகிய இடங்களில் நான்கு பாதுகாப்பு தங்கல் மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தற்போது 635 பேர் உள்ளனர்.

தமிழினியின் விசேடமான வழக்கு - பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நூதனமான சங்கடத்தை தோற்றுவித்தது. தமிழினி தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இருக்கவில்லை.

கொழும்பில் அல்லது தென் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எந்த தாக்குதலிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழினி - தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு அரசியல் பொறுப்பாளர் என பிரபலமாக இருந்தவர்.

அவர், தடுப்பிலுள்ள முன்னாள் பெண் புலிகளுள் அதியுயர் தரத்தினராக உள்ள போதிலும் இராணுவ போராளி என்பதைவிட கூடுதலாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றே அறியப்பட்டவர்.

இந்த பின்னணியில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமிழினியை இலக்கு வைத்து தண்டிக்க வேண்டிய தேவை அல்லது நிர்ப்பந்தம் இருக்கவில்லை. அவர், உயர்தர சிரேஷ்ட தரத்தினராயினும் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரிகளில் சிலரே அவரை நீதிமன்றில் குற்றஞ்சாட்டி நீண்டகால மறியல் தண்டனை விதிக்கப்படுவதை விரும்பினர்.

பயங்கரமான பொதுமக்கள் படுகொலை, சிரேஷ்ட அரசியல் தலைவர் படுகொலை அல்லது ஏராளமாக இறப்புகளுக்கு காரணமாக வெடிபொருட்கள் பயன்படுத்திய தாக்குதல் என்பவற்றில் தமிழினி பங்குபெற்றிருந்தால் நிலைமை வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால், இந்தவகையில் அவரது கைகள் சுத்தமானதாக இருந்தன. இதனால் இவரை நீதிமன்றில் நிறுத்தி குற்றவாளியாக நிறுவுவதில் பேரார்வம் காணப்படவில்லை.

இருப்பினும் இவரை தடுப்பிலிருந்து விடுவிப்பதிலும் ஒரு தடையுள்ளது. இங்கு தமிழினியின் கடந்த காலம் பிரச்சினையில்லை. ஆனால், அவரது எதிர்கால போக்கு எப்படியமையும் என்பதே பிரச்சினை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளில் உயர்தரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார். இவர் தனது விடுதலையின் பின் என்ன செய்யக்கூடும்?  அரசுக்கு எதிரான பிரசாரத்தில் புலி ஆதரவு தமிழ் புலம்பெயர்ந்தோரினால் அல்லது புலிகளினால் இவர் பயன்படுத்தப்படுவாரா?  இவர் வெளிநாட்டுக்கு சென்றால் அங்கு உள்நோக்கம் கொண்டவர்களால் அவர் பிரசாரக் கருவியாக பயன்படுத்தப்படுவாரா? இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளில் உள்ள கடும் போக்காளர்கள் இவரை தம்முடன் சேர்த்துக்கொண்டு மோதல் அரசியலை வளர்க்க முற்படுவார்களா?

அதிகாரிகள்

மறுபுறத்தில் தமிழினியை காலவரையறையின்றி தடுப்பில் வைத்திருக்க முடியாது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் பூரணமாக உணர்த்தியிருந்தனர். ஏற்கனவே, நீதிமன்றில் தமிழினி தொடர்ந்து பலமுறை ஆஜர் செய்யப்பட்டமை அரசாங்கம் குறித்து பாதகமாக கருத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

தமிழினி மீது வழக்கு தாக்கல் செய்து நீண்ட கால சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதும் பொருத்தமானதாக இருக்கவில்லை. ஏனெனில் அரசியல் பிரிவு பொறுப்பாளருக்கு கடும் தண்டனை வழங்குவது அரசாங்கம் பற்றி மோசமான கருத்தை உருவாக்கும்.

அத்துடன், தமிழினி தனது கடந்தகால தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாக பேசிய முறையும் அவரது பரிதவிப்பும் அவர் பற்றிய பெரும் அனுதாபத்தை தோற்றுவித்திருந்தது. இவர் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பியோர் ஒரு சிலரே காணப்பட்டனர்.

தமிழினி பற்றி அதிகாரிகள் பெரும் கவலையோடிருந்தனர். 'என்னை நம்புங்கள், அவரை நீண்ட காலம் தடுத்து வைக்கும் எண்ணமோ விருப்பமோ எமக்கு இல்லை. நாம் தமிழினியை விடுவிக்க விரும்புகிறோம். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கவுள்ளது என்பதே எமது கவலையாக உள்ளது. இவர் தனது விடுதலையின் பின் பாதகமான நடவடிக்கையில் ஈடுபடமாட்டார் என நாம் எப்படி நிச்சயப்படுத்த முடியும்?' என ஒரு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

இது தமிழினியின் பாதுகாப்பு நிறுவனம் எதிர்கொண்ட பிரச்சினையாக இருந்தது. இருப்பினும் இந்த பிரச்சினை இயந்திரத்தால் வரும் கடவுள் (Deus ex machina) என்ற முறையில் தீர்க்கப்பட்டது. இதில், தீர்க்க முடியாததுபோல தோன்றும் ஒரு பிரச்சினைக்கு திடீரென தீர்வு கிடைக்கும். இது எதிர்பாராத ஒரு நிகழ்வு, பாத்திரம் அல்லது பொருளின் உதவியால் சாத்தியமாவதாக இருக்கும்.

புராதன கிரேக்க நாடகங்களில் மேடையில் கடவுளாக நடிப்போர் ஒரு பாரந்தூக்கியால் மேடையிலிருந்து உயர்த்தப்படுவர். அல்லது ஆகாயத்திலிருந்து இடையில் இறக்கப்படுவர். இதுவே, இயந்திரத்தினால் வரும் கடவுள் என்ற சொற்றொடரின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. தமிழினியின் நவீன சோக நாடகத்தில் இயந்திரத்தால் வரும் கடவுள் யாராக அல்லது எதுவாக இருக்கப் போகின்றது?

(அடுத்தவாரம் பார்ப்போம்...)

தமிழில்: ந. கிருஷ்ணராசா

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X