2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியத் துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்  செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளித் தமிழர்களின் மேம்பாடு, இந்திய வீடமைப்புத் திட்டம், தற்போது நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.

இச்சந்திப்பில் இந்தியத் துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

OCI அந்தஸ்து: மலையக மக்களுக்கு 'கடல் கடந்த இந்தியக் குடியுரிமை' (OCI) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குச் சாதகமான பதிலை எதிர்பார்ப்பது.

மீனவர் பிரச்சினை: இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைக் கட்டுப்படுத்தி, அதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தல்.

அகதிகள் மறுவாழ்வு: இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குதல் அல்லது நாடு திரும்ப விரும்புவோருக்கு இலங்கையில் வாழ்வாதார வேலைத்திட்டங்களை அமைத்துக் கொடுத்தல்.

வீடமைப்புத் திட்டம்: 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மேலதிக வீடுகளைப் பெற்றுக்கொடுத்தல்.

சுகாதாரக் காப்புறுதி: இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களுக்கு விசேட சுகாதாரக் காப்புறுதி திட்டங்களை உருவாக்குதல்.

புலமைப்பரிசில்: இந்திய அரசால் வழங்கப்படும் கல்விப் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் தற்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ப அதிகரித்தல்.

தகவல் தொழில்நுட்பம் (IT): இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மலையகப் பகுதிகளில் ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

அம்புலன்ஸ் வசதி: தோட்டப்புறப் பகுதிகளின் சுகாதாரத் தேவைகளுக்காகச் சிறிய ரக அம்புலன்ஸ் வண்டிகளை வழங்குதல்.

டிஜிட்டல் பொருளாதாரம்: இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்பை ஊக்கப்படுத்த இந்திய அரசாங்கம் ஆதரவு வழங்குதல்.

உணவு உற்பத்தி: உணவு தயாரிக்கும் பிரத்யேக வலயங்களை உருவாக்குதல்.

மருந்து உற்பத்தி: இலங்கையில் மருந்து உற்பத்தியை மேற்கொள்ள இந்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்.

ரயில்வே மேம்பாடு: வட மாகாணத்தைப் போன்றே மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் ரயில் பாதைகளையும் நவீனமயப்படுத்துதல்.

ஆடை உற்பத்தி: மலையகப் பகுதிகளில் புதிய ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குதல்.

இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி இராமேஸ்வரன் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .