Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இராணுவம் துடைத்தெறிய விரும்பிய நிலையில், அவர்களை சரணடைய அனுமதிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் ராஜபக்ஷக்கள் பேரம்பேசியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதன்கிழமை (18) வெளிப்படுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைந்திருந்தால் பிரபாகரன் தற்போது வடக்கின் முதலமைச்சராக இருப்பாரென பொன்சேகா கூறியுள்ளார்.
புலித் தலைவர்கள் சரணடையும் வாய்ப்பொன்றை வழங்குவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலையில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாக செய்தியாளர் மாநாடொன்றில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அப்போது பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தாபயவுக்கும் ஷவேந்திர சில்வாவுக்குமிடையே புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிப்பது பற்றி 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மாலை இடம்பெற்றதாக பொன்சேகா கூறிய தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிப்பது குறித்து ராஜபக்ஷக்கள் கலந்துரையாடியதாகவும், ஆனால் இராணுவத்திடம் சரணடைய புலிகள் மறுத்ததுடன், மூன்றாம் தரப்பொன்றிடம் சரணடைய விரும்பியதாகக் கூறியுள்ளார்.
மூன்றாந் தரப்பிடம் புலிகள் சரணடைவதை ராஜபக்ஷக்கள் எதிர்த்ததாகவும், இராணுவத்திடம் சரணடைய விரும்பியதாக தொலைபேசி உரையாடலில் கூறப்பட்டுள்ளது என பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவத்திடம் சரணடைய புலிகள் மறுத்த நிலையில் திட்டம் தோல்வியடைந்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாளில் சீனாவில் தானிருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடனான கலந்துரையாடல்கள் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
கலந்துரையாடல் 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி நடைபெறும்போது புலித் தலைவர்கள் 400 மீற்றர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டதாகவும், அடுத்த சில மணித்தியாலங்களில் தாங்கள் இறந்து விடுவோமென புலிகளுக்குத் தெரியுமென பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடலை காணொளியாகப் பதிவு செய்த ஊடகவியலாளர் கொல்லப்படுவாரென்ற அச்சத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், மூன்றாந் தரப்பொன்றினூடாக மிக அண்மையில் காணொளியைத் தான் பெற்றதாக பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026