2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பள்ளிவாசலை புனரமைத்து தருமாறு ஜனாதிபதிக்கு மகஜர்

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா, வெள்ளைமணல் கருமலைஊற்று பள்ளிவாசலை புனரமைத்து மக்களிடம் ஒப்படைக்குமாறு மஜ்லிஸ் அஷ்சூரா ஜனாதிபதிக்கு அவசர மகஜர் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளது.
 
இச் சம்மேளத்தின் தலைவர் அஷ்ஷேஹ் மௌலவி ஏ.எம்.ஹிதாயத்துள்ளா மற்றும் அதன் செயலாளர் உயர் நீதி மன்றப் பதிவாளர் எம்.ஐ.நியாஸ் ஆகியோரால் ஒப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்த பள்ளிவாசலே கருமலைஊற்று பள்ளிவாசலாகும். 16 ஆம் நூற்றாண்டில் இது நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இதன் கட்டட அமைப்பு இதற்குச் சான்றாகும். ஆங்கிலேயர் காலத்தில் இதற்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது 1827 ஆம் ஆண்டாகும். யுத்த காலத்தில் சில காலம் இது கைவிடப்பட்டிருந்தாலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள் இங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது பாதுகாப்பு பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் அங்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் எதுவித சமரசத்துக்கும் இடமில்லாத வகையில் இப்பள்ளிவாசல் மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். கௌரவ ஜனாதிபதி அவர்களே எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
 
மேலும் கிண்ணியா பிரதேசம் இரு உள்ளூராட்சி மன்றங்களை கொண்ட பிரதேசமாகும். அவை கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை என்பனவாகும். கிண்ணியா பிரதேச சபை எல்லைகளை உள்ளடக்கி கிண்ணியா மேற்கு பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கப்படல் வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். 16 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய இப் பிரிவில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், நன்னீர் பீன்பிடி, கால்நடை வளர்ப்பு, கடல் ஏரி மீன்பிடி என முக்கிய பொருளாதார வளங்களைக் கொண்ட இப்பிரதேசம் எதிர் காலத்தில் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பினைச் செய்யும் பிரதேசமாக மாறும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.
 
இது தொடர்பாக மூன்று ஆணைக்குழுக்கள் முன்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இது இன்றுவரை நிறைவேறவில்லை. கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போதும் கிண்ணியா பிரச்சார மேடையில் தாங்கள் வழங்கிய வாக்குறுதி இது என்பதையும் ஞாபகமூட்டுகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .