2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஈ.எஃப்.எல் கிண்ண காலிறுதியில் லிவர்பூல், ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ.எஃப்.எல் கிண்ணத்தின் நான்காம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகங்களான லிவர்பூல், ஆர்சனல் ஆகியன, காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல், ஈ.எஃப்.எல் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் லிவர்பூல் சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டேனியல் ஸ்டரிஜ் பெற்றார். எவ்வாறெனினும் டிவோக் ஒரிஜியினால் வழங்கப்பட்ட இரண்டு இலகுவான‌ கோல் பெறும் வாய்ப்புகளை, ஸ்டரிஜ் தவறவிட்டிருந்தார். டொட்டென்ஹாம் சார்பாக பெறப்பட்ட கோலினை, பெனால்டி பகுதிக்குள் வைத்து மாற்றுவீரர் எரிக் லமேலா, தவறாகக் கையாளப்பட, கிடைத்த பெனால்டியை வின்சென்ட் ஜன்சென் கோலாக்கினார்.

இப்போட்டியில் பங்கேற்ற லிவர்பூல் அணியில், கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற  பிறீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற லிவர்பூல் அணியிலிருந்து 11 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணியில் 10 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆர்சனல், றீடிங் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்சனல், ஈ.எஃப்.எல் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆர்சனல் சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின் பெற்றார். இப்பருவகாலத்தில், ஆர்சனலின் முதன்மை அணியில் இடம்பெறத் தடுமாறிவரும் ஒக்லேட் சம்பர்லினே, இப்போட்டியில் ஆர்சனல் வெற்றி பெறுவதற்கு பேருதவி புரிந்திருந்தார்.  

விலகல் முறையில் இடம்பெறும் இத்தொடரில், பிறீமியர் லீக், இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக்கின் அனைத்தும் கழகங்களும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 92 அணிகள் பங்குபற்றும் இத்தொடரில் வெற்றி பெறும் அணி, ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் இரண்டாம் நிலை கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையேயான தொடரான, யூரோப்பா லீக்குக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் தற்போதைய சம்பியன்களாக, மன்செஸ்டர் சிற்றி விளங்குகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .