Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளரான றொப் வோல்டர், தனது நான்காண்டுகள் ஒப்பந்தத்தில் இரண்டாண்டுகளுடன் இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் வோல்டர் விலகியதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்தபோதும், இருதரப்புத் தொடர்களில் வோல்டரின் கீழ் தென்னாபிரிக்காவின் மோசமான பெறுபேறுகள் மற்றும் நியூசிலாந்திலிருந்து அவர் தொடர்ந்து பயணிப்பதன் காரணமாகவே அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் 2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு வோல்டர் கீழ் முன்னேறியிருந்த தென்னாபிரிக்கா, 2024ஆம் ஆண்டு இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருந்தது.
எனினும் வோல்டரின் கீழ் விளையாடிய ஏழு இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களில், பாகிஸ்தானால் முதன்முறையாக வெள்ளையடிப்பு செய்தமை உள்ளடங்கலாக மூன்றில் தோற்றது. தவிர எட்டு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடர்களில் ஒன்றிலேஏ வென்றிருந்தது.
இருந்தபோதும் இருதரப்புத் தொடர்களில் முழுப் பலமுள்ள அணிகள் வோல்டருக்கு வழங்கப்படுவதில்லை. வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதுடன், உள்ளூர் இருபதுக்கு - 20 தொடர்களில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு கறுப்பின வீரரே தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாகவும் விமர்சிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் ஜெரால்ட் கொயட்ஸி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், றயான் றிக்கெல்டன் உட்பட்ட 14 பேருக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை வோல்டர் வழங்கியதுடன், கவெனா மபஹா உட்பட 13 பேருக்கு இருபதுக்கு - 20 சர்வதேச அறிமுகங்களையும் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் வோல்டரைப் பிரதியிடுவதற்கான கலந்துரையாடலில் முன்னாள் தென்னாபிரிக்க வீரர் றொபின் பீற்றர்சன் உள்ளார்.
1 hours ago
3 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
06 Feb 2026