2026 மார்ச் 30, திங்கட்கிழமை

ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பூ.லின்ரன்

  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக, சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் 1,000 மில்லியன் (100 கோடி) ரூபாய் இழப்பீடு கோரி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

'கொழும்பு டெலிகிராப்' (Colombo Telegraph) இணையத்தளத்தில் ரட்ணஜீவன் கூல் கட்டுரையொன்றை கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி எழுதியிருந்தார். அதில், "போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் சட்டத்தரணிகளைக் காப்பாற்றும் நோக்கில், கலாநிதி கு. குருபரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

  ரட்ணஜீவன் கூலின் இந்தக் கூற்றானது, தனது சட்டத் தொழிலையும், தொழில்சார் நேர்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும், தனக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் முன்வைக்கப்பட்ட திட்டமிட்ட அவதூறு என கலாநிதி கு. குருபரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 தமது சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் த. தினேஷ் ஆகியோர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ரட்ணஜீவன் கூலின் கருத்துக்களால் தனக்கு ஏற்பட்ட அபகீர்த்தி மற்றும் இழப்பீடாக 100 கோடி ரூபாயை அவர் வழங்க வேண்டும் என கலாநிதி கு. குருபரன் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .