2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பதவி விலகினார் றொட் மார்ஷ்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 16 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளரான றொட் மார்ஷ், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிராகவும் இலங்கை அணிக்கெதிராகவும் அண்மைய நாட்களாகப் பெறப்பட்ட தோல்வியைத் தொடர்ந்தே, அவர் பதவி விலகியுள்ளார்.

இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த அவுஸ்திரேலியா, தற்போது அவுஸ்திரேலியாவில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடரில், முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. தவிர, இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இதன்போது, தேர்வாளர்களின் முடிவுகளும் விமர்சிக்கப்பட்டிருந்தன. மார்ஷின் பதவிக் காலம், அடுத்தாண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் பதவியில் தொடரும் எண்ணம் இல்லையென, அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் தோல்வியைத் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக, தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக, றொட் மார்ஷ், நேற்று அறிவித்தார்.

"இது எனது தனிப்பட்ட முடிவு. அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையில் எவரும், இது தொடர்பாக எனக்கு அழுத்தம் வழங்கவோ அல்லது இதைப் பரிந்துரைக்கவோ இல்லை" என, மார்ஷ் தெரிவித்தார்.

புதிய மாற்றம் தேவைப்படுவதாகத் தெரிவித்த, எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக டெஸ்ட் அணியில் புதிய வீரர்கள் தேவைப்படுவதைப் போன்றே, தேர்வாளர்களிலும் புதுமுகங்கள் தேவைப்படுவதாக, அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .