2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 23 பேர் உயிரிழப்பு

Editorial   / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான 'வனஜா பட்டாசு ஆலை' இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆலையின் முன்புற வராண்டாவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் தாக்கத்தால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சிதறிச் சேதமடைந்ததுடன், சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின.

இவ்விபத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' (X) சமூகவலைதளப் பதிவில்:

"கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லப் பணித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி   வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:

"தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .