2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

றியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதலாவது பதக்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை, பெண் மல்யுத்த வீராங்கனையான ஷக்ஷி மலிக் பெற்றுக் கொடுத்துள்ளார். பெண்களுக்கான 58 கிலோகிராம் பிரிவிலேயே ஷக்ஷி மலிக் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த வெண்கலப் பதக்கத்தை ஷக்ஷி மலிக் வென்றதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில், பதக்கம் பெற்ற முதலாவது இந்திய மல்யுத்த வீராங்கனையாகவும் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற நான்காவது இந்திய வீராங்கனையாகவும் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.

ஷக்ஷி மலிக், 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோ பொதுநலவாயப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2014ஆம் ஆண்டு இன்ஷியான் ஆசியப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஷக்ஷி மலிக், மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெறும் முதலாவது இந்திய வீராங்கனையாவேன் என்று தான் எப்போதும் நினைக்கவில்லை என்று கூறியதுடன், எஞ்சியிருக்கும் மல்யுத்த வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் வியாழக்கிழமை (18) வென்ற வெண்கலப் பதக்கமானது, 12 வருடங்களின் அர்ப்பணிப்பு என்று மேலும் தெரிவித்த அவர், தான் இறுதி வரை விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இறுதிச் சுற்றில், தன்னாலான அனைத்தையும் வழங்கியதாகவும் தன்னிடம் தன்னம்பிக்கை இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஷக்ஷி மலிக் பிறந்த இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், சில நேரங்களில் மல்யுத்தப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில், இளம் வயதிலிருந்தே பயிற்சி பெற்ற ஷக்ஷி மலிக், பெற்றோர்களின் ஆதரவையும் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .