2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

களைக்கட்டும் அக்ஷய திருதியை

Mayu   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகவாழ் இந்து மக்கள் தமது வாழ்வில் செல்வம் பெருக வேண்டி, சுபகாரியங்களுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் அக்ஷய திருதியை இன்று (19) ஞாயிற்றுக்கிழமை பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைகளைக் கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்று காலை நகைக் கடைகள் அனைத்தும் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு கும்ப வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னரே நகை வியாபாரம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.;'

இன்றைய விசேட தினத்தில் நகை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடை உரிமையாளர்களால் விசேட பரிசுகளும் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன. மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் தமக்கு விருப்பமான நகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வனவு செய்தனர்.

தற்போதைய தங்கத்தின் அதிக விலையேற்றம் காரணமாக, தங்கம் வாங்க முடியாதவர்கள் அதற்குப் பதிலாகத் தமது வாழ்வில் செல்வம் குறையாதிருக்க உப்பு, வெள்ளை பச்சை அரிசி மற்றும் மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். இவற்றைத் தமது இல்லங்களில் உள்ள பூஜை அறைகளில் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறம் மட்டுமன்றி, கிராமப்புறப் பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான மக்கள் நகர் பகுதிக்கு வருகை தந்ததால், வர்த்தக நிலையங்கள் இன்று களைகட்டியிருந்தன.

வ.சக்தி

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .