2026 மே 04, திங்கட்கிழமை

இந்திய அரசின் உதவிகள் தொடரும்: சுஷ்மா

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


'இந்தியாவும் இலங்கையும் நீண்டகால நட்புறவைக்கொண்ட நாடுகள் என்ற வகையில் தற்போது வழங்கப்பட்டுவரும் உதவிகள் போன்று எதிர்வரும் காலங்களிலும் முடியுமான சகலவழிகளிலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கும்' என்று இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா ஸ்வ்ராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தை தேசிய தொழில் கல்லூரியாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அனைத்து அரசாங்கங்களும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் தொழிலை வழங்குவதற்கு முயற்சிக்கின்றன. இருந்தபோதும் பல்வேறு சவால்களின் காரணமாக அது முடியாது போய்விடுகின்றது.

உண்மையைக் கூறுவதாயின் எல்லோருக்கும் அரசாங்கமே வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்; என்பதும் தவறான வாதமாகும். அவ்வாறு நோக்கும் போது தொழிற்பயிற்சி வழங்கும் மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் பல்வேறு தொழில்சார் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றுள்ளோம்.

அதன் மூலம் கிடைத்த நிபுணத்துவத்தையே நாம் இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.
ஏற்கனவே இது தொடர்பான பயிற்சிகளை நாம் இலங்கை போதனாசிரியர்களுக்கு அளித்துள்ளமையினால் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்நவீன உபகரணங்களை கையாளவும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் முடியுமாகவிருக்கும்.

இதனை இங்குள்ள மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை இது மேலும் பலப்படுத்துமெனவும் நான் நம்புகின்றேன்.

இந்தியா இலங்கையில் 52 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி வருகின்றன.

போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொழில்துறை என பல வகையான திட்டங்களும் இவற்றில் அடங்குகின்றன.  நட்புறவுமிக்க நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா உட்கட்டமைப்பு வசதிகள் விடயத்தில் உதவிகளை வழங்கியுள்ளது.

இதேநேரம் இலங்கை புதிய உதவிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. இவையனைத்தையும் இயலுமான சகல வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்' என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், எட்வின் கிருஸ்ணானந்தராசா, திரவியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .