2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கடற்கரை வளம் அழிக்கப்படுவதை தடுக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

ஆரையம்பதி பிரதேசத்தின் ஆரையம்பதி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கடற்கரைப் பகுதியில் திட்டமிட்டு தாளம் பற்றைகள் அகற்றப்பட்டு கடல் வார்ப்பு மணல்கள் கனரக வாகனங்கள் மூலம் அகழப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தும், இதனைத்தடுத்து நிறுத்துமாறுக் கோரியும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் ஏனைய சம்மந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர், திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், இணைப்பாளர் கரையோரம் பேணல் மற்றும், கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

குறித்த பிரச்சனை தொடர்பாக மிக துரிதமாக செயற்பட்டு சட்டத்திற்கு முரணாக இடப்பட்டுள்ள வேலிகளை அகற்றுவதுடன் கரையோர வலய வளங்களை பாதுகாப்பதற்கும், இறங்குதுறைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தினை மீனவர்களின் பாவனைக்கு பெற்றுக்கொடுக்க  உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி பிரதேசத்தின் ஆரையம்பதி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கடற்கரைப் பகுதியில் திட்டமிட்டு தாளம் பற்றைகள் அகற்றப்பட்டு கடல் வார்ப்பு மணல்கள் கனரக வாகனங்கள் மூலம் அகழப்பட்டுக் கொண்டிருப்பதுடன் கடந்த  23.05.2011ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச சபை மூலம் இறங்கு துறைக்கென கோரப்பட்ட காணி திட்டமிட்ட குடியேற்றத்தின் பொருட்டு (இயற்கையான நீரோடையுடன் கூடிய இறங்குதுறை) மணல் மூடி நிரப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக ஆரையம்பதி நரசிம்மர் கடல்தொழில் மீனவர் சங்கம் மற்றும் ஆரையம்பதி நரசிம்மர் ஆலய பரிபாலன சபையினர் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் துறைசார் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் கடந்த  30.04.2014 ஆம் திகதியில்  காத்தான்குடி பொலிஸ்,  மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் குறித்த தினத்தில் முறைப்பாடும் மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கப் பூர்வமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என குறித்த பொது அமைப்புக்கள் எம்மிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

1981ஆம் ஆண்டில் 57ஆம் இலக்க கரையோர வலயச் சட்டத்திற்கு அமையவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சுற்று நிருவங்களுக்கு அமையவும் மேற்படி கடற்கரையினையும்  கடல் வளங்களையும் அபகரிப்பதும் சட்டத்திற்கு முரணானதாகும்.

அத்தோடு ஆரையம்பதி மக்களினால் கடற்கரை எல்லை பறிக்கப்படுவதும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாகவும் தங்களின் கவனத்திற்கு பலதடவைகள் முன்கொண்டுவரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே ஆரையம்பதி இறங்குதுறைக்கென ஒதுக்கப்பட்ட காணியினை தனிப்பட்ட நபர் தனது உடமைக்காக முற்படுவது சட்டத்திற்கு முரணானது.

இலங்கையில் எவ் இனத்தைச் சேர்ந்தவரானாலும் இலங்கைச் சட்ட திட்டங்களின்படி ஒரே நீதியான தீர்ப்பு வழங்கப்படும்.

அப்பாவி ஏழை மக்கள், காணி அற்றவர்கள், தமிழர்கள் குடியிருப்பிற்காகா 10பேச், 20பேச் அரச காணிகளைச் கோரும்போது சட்ட சுற்று நிருபங்களைக் கூறும் சட்டம், இவ்வாறு ஆரையம்பதி தமிழர்களின் கடற்கரை நிலம் பறிக்கப்படும் போது இலங்கைச் சட்டதிட்டங்களுக்கு முரணாக குற்றம் இழைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டப்படுவது வேதனையினைத் தருகின்றது.

ஆகவே சமூக அக்கறை மேலோங்கப்பட்ட தாங்கள் இது தொடர்பாக மிகத்துரிதமாக செயற்பட்டு சட்டத்திற்கு முரணாக இடப்பட்டுள்ள வேலிகளை அகற்றுவதுடன் கரையோர வலய வளங்களை பாதுகாப்பதற்கும், இறங்குதுறைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தினை மீனவர்களின் பாவனைக்கு பெற்றுக் கொடுக்க  உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X