2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன் 'நூரளை, அம்பகமுவை பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.சதிஸ்

'உள்ளூராட்சிமன்ற தேரத்லை நடத்துவதற்கு முன்னர், நுவரெலியா மற்றும் அம்பகமுவை பிரதேச சபைகள் பிரிக்கப்படல் வேண்டும். அதேபோன்று, பிரதேச செயலகங்களும் பிரிக்கப்பட வேண்டும். அரசாங்கம் இவ்விடயத்தில் மலையக மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும்' என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனராஜ் தெரிவித்தார்.

'நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில், மக்கள் தொகையிலும் பார்க்க பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.  இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது  அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக  அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் சமமான முறையில் ஒதுக்கீடுகளும் பங்கீடுகளும் சென்றடையும் வகையில் அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதுதொடர்பில் மேலும் கூறிய அவர்,

'உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான அறிகுறிகளும் தென்படவில்லை. நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தி கிராம மட்டத்தில் மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக கட்டமைப்பினாலேயே மக்கள் நலன்சார் வேலைத் திட்டங்களை சுதந்திரமாக முன்னெடுக்க  முடியும். அதுவும் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசியமான அடிப்படை பிரச்சினைகளை கையாழும் நிறுவனங்களாக காணப்படுவதால் பிரச்சினைகளின் தீர்வுக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு அவசியமானதாகும்' என்றார்.

'உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடத்தப்பட வேண்டிய தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் காலம்தாழ்த்துவது, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில்  கைவைக்கும்  செயலாகும்.   தேர்தல் பிற்போடப்படுவதற்கு புதிய தேர்தல்  வட்டாரங்களை உருவாக்குவதில்  ஏற்பட்டுள்ள காலதாமதமே காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.  தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதியான நிலைபாட்டில் அரசாங்கம் இருக்குமேயானால் அதை, ஒரு காலவரையறைக்குள் செய்து முடிக்க முடியும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .