2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கெலிவத்தை, ஹொலிரூட்டில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ், எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜா

 

தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து, கெலிவத்தை தோட்டம் மற்றும் தலவாக்கலை ஒலிரூட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள்,   இருவேறு ஆர்ப்பாட்டங்களில் இன்று ஈடுபட்டனர்.

திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவு, கெலிவத்தை தோட்டத்  தேயிலைத் தொழிற்சாலையை மூடுவதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதைக் கண்டித்து, கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சாலைக்கு முன்பாக, இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஒன்பதாவது தடவையாகவும் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை  பெற்று,  சிறந்து விளங்கிய தொழிற்சாலையை,  காரணங்களை தெளிவுப்படுத்தாமல் மூடுவதற்கு ஒருபோதும் இடமளியோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில், தோட்ட தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  தொழிலாளர் கோரிக்கை விடுத்தனர். தனி ஒரு தொழிற்சங்கமாக இருந்தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவதாகவும் இல்லையேல் முடியாது எனவும் தொழிற்சங்கமொன்று  கூறியதாகவும், தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் இப்பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  தினம் ஒரு தொலைநகல்

அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், தோட்டக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

கெலிவத்தை தோட்டத் தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை,  கடந்த 01 ஆம் திகதி முதல், தோட்ட நிர்வாகம் முடக்கியுள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலையில் அரைக்கப்பட்டு வந்த தேயிலைக் கொழுந்து, கொட்டகலை ஸ்டோனிகிளிப் மற்றும் போகாவத்தை தோட்டங்களிலுள்ள தொழிற்சாலைகளுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால், தொழிற்சாலையில் பணியாற்றிய 80 தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனரெனவும்,  தொழிற்சாலை இயங்காவிட்டால் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே தொழிற்சாலையை திறக்கும் வரை,  போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக 150க்கு மேற்பட்டத் தொழிலாளர்கள்,  இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம், 18 கிலோவுக்கு அதிகமான தேயிலைக் கொழுந்தை பறிக்குமாறும்  வலியுறுத்துவதால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாகவே,  இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை மலைகள்,  காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேயிலைக் காணிகள் பல, நல்ல  விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுப்பதில் அக்கரைக் காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமான கொழுந்தை பறிக்குமாறு, தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .