2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

‘சுரக்ஷா காப்புறுதி திட்டத்துக்காக பணம் அறவிட முடியாது’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தியாகு

கல்வியமைச்சின் மூலமாக, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதித் திட்டத்துக்கு, மாணவர்களைப் பதிவு செய்கின்ற போது, ஒரு சில பாடசாலைகளில், ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக பெற்றோர்களால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

“பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பணம் கேட்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்பாக, தனது அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று (03)  அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி, இலவசக் காப்புறுதித் திட்டமொன்றை, கல்வியமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காப்புறுதித் திட்டம், “சுரக்ஷா” எனும் பெயரில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

“இந்தக் காப்புறுதி திட்டத்தின் மூலமாக, மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வரை காப்புறுதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக அனைத்து மாணவர்களும் தங்களைத் தங்களுடைய பாடசாலைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

“அதற்காக எந்தவொரு கட்டணத்தையும் பாடசாலையில் அதிபர்களோ, ஆசிரியர்களோ அறவிட முடியாது. இலவசமாகப் பதிவு செய்து கொள்வதன் மூலம், இந்தத் திட்டத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.

“மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சுகவீனம், விபத்துகள், ஏனைய மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளின் போது, அவர்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம், பெற்றோர்களுக்கு பாரிய சுமயை, அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

“மாணவர்கள் தங்களுடைய 13 வருட கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காகவே, இத்திட்டத்தை, அரசாங்கம் நடைமுறைபடுத்தி வருகின்றது.

எனவே, இதற்காக பாடசாலைகளில் எந்தக் காரணம் கொண்டும் பணம் அறவிட முடியாது. அப்படி பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டால், அது தொடர்பாக என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், குறித்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .