2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

திறந்த பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க கோரிக்கை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையக கல்வி என்பது  எமது சமூகத்தின் எழுச்சிக்கான வித்து என்பதை சரியாக புரிந்துக்கொண்டு, அனைத்துத் தரப்பினரும் தத்தமது பங்களிப்பை நல்கவேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்களுக்காக இந்தப்பணியை சரியாக செய்து வருகிறது. ஹட்டனில் இயங்கிவரும் திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தை, பிராந்திய கற்கை நிலையமாக விஸ்தரிக்க கோரும் எமது மத்திய மாகாணசபை பிரேரணை, மலையக கல்வி வளர்ச்சியை மேம்பட செய்வதற்கான இன்னுமொரு நடவடிக்கையாகுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

'மத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை என்பது மூன்று மாவட்டங்களை சேர்ந்த 58 உறுப்பினர்களால் மத்திய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படுகின்ற வலுவுள்ள விண்ணப்பமாகும். மலையக கல்வியை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்கள்' என குறிப்பிட்டார்.  

'எமது  இந்த முயற்சியை சில தரப்பினர் கொச்சைப்படுத்த முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். மலையகத்தில் அரசியல்வாதிகள் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான விளையாட்டுப் பொருளாக கல்வியை கருதக் கூடாது. தற்போதய மலையக கல்வி சமூகம் , அரசியல்வாதிகளின் நோக்கங்களையும், செயற்பாடுகளையும்  உன்னிப்பாகவும்  தெளிவாகவும் அவதானித்துக்கொண்டிருப்பதை எவறும் மறந்து செயற்பட கூடாது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக கல்வி தொடர்பாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. மலையக கல்வி வளர்ச்சி 1982ஆம் ஆண்டு 402 ஆசிரியர் நியமனத்திலிருந்து பாரிய அளவில் வளர்ச்சியடைய தொடங்கியது. அதை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. சீடா, ஜீசிசெட், நிறுவனங்கள் மூலமாக பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தமை மலையக கல்வி வளர்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது' என்றார்.

'இதைத் தொடர்ந்து ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி, கொட்டகல ஆசிரியர் பயிற்சி கல்லூரி என்பன மலையகத்துக்கு தரமான ஆசிரியர்களை உருவாக்க உதவின. தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மலையகத்தில் தொழிற் கல்விக்கான திறவுகோலாக அமைந்தது. இவையெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சக்தியின் மூலம் பெறப்பட்டதாகும். ஏதிர்காலத்தில் மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை, ஹட்டனில் அமைக்க நாம் முயற்சி எடுத்து வருகின்றோம்.  இதற்காகவே மத்திய மாகாண சபையில் மலையகத்திற்கான திறந்த பல்கலைக்கழக பிராந்திய கிளையை ஹட்டனில் அமைக்கக் கோரும் பிரேரணையை சமர்பித்துள்ளோம்.

இந்தப்பிரேரணை நிறைவேற்றப்பட்டபின் மத்திய மாகாணத்தில்  கல்விக்குப் பொறுப்பான முதiமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுடன் இணைந்து, இவ்விடயத்தை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். மத்திய அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து இந்தப்பணியை நிறைவேற்றுவோம்' எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .