2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘தமிழ்நாட்டிலிருந்து 1,500 பேர் யாழுக்கு திரும்பியுள்ளனர்’

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

“யுத்தம் காரணமாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த 1,500 பேர் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ். மாவட்டத்துக்கு திரும்பி வந்துள்ளனர். இதேபோல், தமிழகத்தில் 80,000 பேர் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 15,000 பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கான விசேட ஒழுங்குகளும் செய்யப்பட வேண்டும்” என வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் அகதிகளாக இருந்த 1,500 பேர் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்கள். அவர்களுக்கான விசேட செயற்றிட்டங்கள் குறித்து வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் இன்னும் 80,000 பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 15,000 பேர் யாழ். மாவட்டத்தைட் சேர்ந்தவர்கள். அவர்கள் இங்கே திரும்பி வருகிறவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவதானிக்கிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தில் இருந்து மீண்டும் திரும்பி வருகிற குடும்பங்கள் பூரணமாக வருவதில்லை. பகுதி பகுதியாகவே திரும்பி வருகிறார்கள். எனவே இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்குரிய அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்து அவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான விசேட செயற்றிட்டங்களை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் 2,900 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நாங்கள் தேடிப் பார்த்தபோது சுமார் 100 பேர் வரையிலேயே கண்டறியப்பட்டார்கள். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள் இல்லை. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய நிறுவனங்களும் இங்கு போதுமானதாக இல்லை. எனவே இந்த விடயத்திலும் விசேடமான கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.

தொடர்ந்து நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் அந்நிறுவனம் முன்னாள் போராளிகளுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்ற விடயத்தை நாங்கள் ஆதரித்தோம். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் மாற்று யோசனை என்ன” எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாணச பை உறுப்பினர் கே. சயந்தன், “முன்னாள் போராளிகள் தொடர்பாக பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகள் சரியானவை அல்ல. பிரதேச செயலகங்களில் உள்ள தரவுகளை வைத்து முன்னாள் போராளிகளை தேடியபோது அங்கே அவர்கள் இல்லை. காரணம் அவர்கள் வேறு இடங்களில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த தரவுகள் மீளாய்வு செய்யப்படவேண்டும்” எனக் கூறினார். இதற்கமைய முன்னாள் போராளிகளின் தரவுகளை மீளாய்வு செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .