2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’நுண்நிதி கடனால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து’

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் மட்டும் அண்மைய நாள்களில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்துக்கு சென்றுள்ளதுடன், பெற்றோர்கள் தலைமறைவாகியாமையினால் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என, கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.தயாரூபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவடட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில், நுண்நிதி கடன் நிறுவனங்களினால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது பிரதேச செயலக அண்மைய தகவலின் படி இந்த கடன் நிறுவனங்களினால் 14 குடும்பங்கள் விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் கூறினார்.

அவ்வாறு சென்றுள்ள அனைத்து குடும்பமும் 32 வயதுக்கு உட்படட இளம் குடும்பங்களாகவே காணப்படுவதாகவும், அவர் கூறினார்.

மேலும், நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்ற பெற்றோர்கள் கடன் வசூலிப்பளர்களுக்கு பயந்து வீடுகளை விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அந்த குடும்பங்களின் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூகத்தில் பாரிய சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர், எனவும், அவர் தெரிவித்தார்.

கடன் நிறுவனங்களால், இவ்வாறான பாதிப்புக்களுக்கு அப்பால் கடன் பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றன. ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளியில் வந்தாலும் பல சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாது நடைபெறுகின்றது. இதனால் எமது பெண்கள் உள, உடல் ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன் பெறுவதை கட்டுப்படுத்த பாதிப்புக்களை எதிர் கொள்ளாமல் இருக்க சட்ட ஏற்பாடுகளை அல்லது கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, நுண்நிதி நிறுவனங்களில் ஒருவரே பல கடன்களை பெறுகின்றனர். மேலும் ஒரு குடும்பத்தில் பல அங்கத்தவர்கள் கடன்களை எடுக்கின்றனர். அப்படியானால் அவர்களால் எவ்வாறு இந்த கடன்களை கட்டிட முடியும். இதனால் தான் சமூகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இது தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு பலமுறை கூறியதன் பயனாக, 46 ஆயிரத்து 500 பேரின் நுண்நிதி கடன்களை அரசு செலுத்தியது. எனினும், இந்தப் பிரச்சினை முடிந்தபாடில்லை. அப்படியாயின் நாம் இந்த நிறுவனங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என நிதி அமைச்சுடன் கலந்துரையாடி ஓர் முடிவெடுக்கலாம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .