2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’மஹிந்த காலத்திலேயே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 01 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். நல்லாட்சி காலத்தில் சிங்கள மக்கள் அவ்வாறு குடியேற்றப்படவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இப்போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது உண்மையான விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து தனது பருத்தித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மகாவலி அதிகாரசபை சிங்கள மக்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கியமையை அரசாங்கம் பொய் எனக் கூறுகிறது. அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் தமது காலத்தில் குடியேற்றம் நடக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே நடந்ததாக இது குறித்து தங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் ஆராய்தமைக்கமைவாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து உண்மையானது. ராஜபக்ஷ காலத்திலேயே குடியேற்றப்பட்டார்கள். ஆனால் ராஜபக்ஷ காலத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு இப்போது காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்.

மேலும் மகாவலி எல் வலய பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினையல்ல. 1980ம் ஆண்டு தொடக்கம் உக்கிரம் பெற்றுவரும் பிரச்சினை. ஆனால் இப்போது சிலர் வந்து மணலாறு பறிபோனால் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என கூறுகிறார்கள். இவர்கள் 10 ஆண்டுகள் நடாளுமன்றத்தில் இருந்தார்கள். அந்த 10 ஆண்டுகளில் 10 தடவைகள் கூட மகாவலி எல் வலய பிரச்சினை குறித்து பேசியிருக்கவில்லை.

எனவே இந்த நபர்களுடைய கருத்து விசித்திரமாக உள்ளது. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவற்றில் இந்த காணி பிணக்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசமைப்பிலும் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான பாதுகாப்பை நாங்கள் தேடி கொண்டிருக்கிறோம்.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் தடுப்பதற்கான போராட்டங்களை செய்யவேண்டும். முன்னர் நாங்கள் போராட்டம் நடாத்தியபோது மக்களை காண முடிவதில்லை. காரணம் அன்றைக்கு மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு அச்சப்பட்டார்கள். 2013ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றில் ஆற்றிய உரையை அண்மையில் மீள எடுத்து பார்த்தேன்.

அதில் கேப்பாபிலவு, வலி வடக்கு, முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள காணி பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். ஆகவே தொடர்ந்தும் நாங்கள் பேசி வருகிறோம். நான் முன்னர் கூறியதைப்போல் அந்த நாட்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட பயப்பட்டார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் இன்று மக்கள் வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனை கூறுவதற்கு நான் தயங்கவில்லை. மேலும் பல விடயங்கள் மாறியுள்ளன. குறிப்பாக கேப்பாபிலவில் சிறிய பகுதி தவிர மற்றய இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி விடுவிக்கப்படாது என்றார்கள். ஆனால், இன்று மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாற்றங்கள் நடப்பதற்கு பிரதான காரணம் ஆட்சிமாற்றமே. ஆட்சிமாற்றத்தால் ஒன்றும் நடக்கவில்லை எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்துக்கு உதவியது எனவும் கூறப்படும் கருத்துகள் அப்பட்டமான பொய்கள். இதனை கூறுவதற்கும் நான் தயங்கவில்லை.
ஆட்சிமாற்றம் இடம்பெறாவிட்டால்  வலி வடக்கில் 6,348 ஏக்கர் காணி அரசாங்கத்துக்கு சென்றிருக்கும்.

கேப்பாபிலவில் ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்பட்டிருக்காது. முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்டிருக்காது. ஆகவே, ஆட்சிமாற்றத்தால் உண்டான நன்மைகளை மறந்துவிடக்கூடாது. மேலும் நல்லாட்சியில் குடி யேற்றங்கள்
நடந்ததாக நாம் அறியவில்லை. சில கரைவலைப்பாட்டு அனுமதிகளை மகாவலி அதிகாரசபை வழங்கியதாக அறிந்தோம். அதற்கு மகாவலி அதிகாரசபைக்கு உரிமை கிடையாது. அதனை சட்டரீதியாக தீர்ப்போம்.

அதேபோல் குடியேற்றங்களையும் இன்றுள்ள சட்டங்களின் பிரகாரமே தீர்க்க முடியும். குறிப்பாக வெளிநாட்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சம்பூர் நிலத்தை நீதிமன்றம் ஊடாக மீட்டோம். அதனை செய்வதற்கு நாங்கள் தயார். ஆனால் அரச தலையீட்டினால் இவை நிறுத்தப்படவேண்டும்.  அண்மையில் ஜனாதிபதி செயலணியிலும்எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தை தெளிவாக கூறியுள்ளார். ஜனாதிபதி அவ்வாறு நடக்கவில்லை என கூறினாலும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .