2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் கொலை: ’ஆதாரங்களில் திருப்தி கொள்வதாக கட்டளை’

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது  தண்டனை சட்டக் கோவை நடைமுறை 296ஆம் பிரிவின் கீழான  குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக  யாழ். நீதிமன்ற நீதவான் ஏ. எஸ். பீற்றர் போல் கட்டளை வழங்கினார்.

அதனால் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை சட்டமா அதிபருக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சந்தேகநபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் தொடர்ந்தும் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ்மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர். 

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சுருக்கமுறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளைக்காக வழக்கு இன்று (ஜூன் 27) வியாழக்கிழமை  தவணையிடப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.  வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி  மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

'சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தின் மீது முன்வைக்கப்பட்ட சான்று ஆதாரங்களில் மன்று திருப்தியடைகின்றது. அதனால் அவர்கள் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.

அதற்காக சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கு ஆவணங்களை சட்டமா அதிபருக்கு பாரப்படுத்த மன்று பணிக்கின்றது. அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்' என்று நீதிவான் கட்டளை வழங்கினார்.

இதேவேளை, தற்போதைய சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவால் குற்றவியல் வழக்குகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுவதால் குறைந்தது 3 மாதங்களுக்குள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X