2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திறப்பு விழா நடத்தப்படாமையால் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் புதியநகர், பெரிய புளியங்குளம், தட்சடம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான வேலைகள் அனைத்தும் முற்றுப்பெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற போதிலும் மக்களுக்கு இதுவரை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை.

மின்மாற்றி திறப்பு விழா செய்யப்படாத காரணத்தாலேயே மக்களுக்கு மின் விநியோகிக்கவில்லை என்று மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

போரினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய மேற்படி பிரதேசங்களில் மக்கள் 2010ஆம் ஆண்டு மீள்குடியேறி தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தமது சொந்தப் பணத்திலும் நிறுவனங்களின் உதவி மூலமும் வீடுகளை அமைத்த மக்களுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் மின் கம்பங்கள் நாட்டப்பட்டு, மின்சாரக் கம்பிகளும் பொருத்தப்பட்டு இரண்டு மின்மாற்றிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்போகிறார்கள் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்கு மின்சுற்று இணைப்பு வேலைகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மின்சார இணைப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த போதிலும் மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படாமை தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார சபை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மின்மாற்றி திறப்பு விழா செய்யப்படவில்லை என்றும் திறப்பு விழாவின் பின்னரே மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .