2025 மே 19, திங்கட்கிழமை

தமிழர்களுக்கு ரஜினியின் பரிசு!

Menaka Mookandi   / 2014 மார்ச் 10 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சு பண்ணதுதான் இந்த கோச்சடையான், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, சவுந்தர்யாவின் இயக்கத்தை மேற்பார்வையும் செய்துள்ளார். முரளி மனோகர் தயாரிக்க, ஈராஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது. இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவைப் பார்க்கவும், வெளியில் ரஜினியைப் பார்க்கவும் திரண்டிருந்த கூட்டம் வரலாறு காணாதது என்றால் மிகையல்ல. சத்யம் அரங்குக்கு பக்கத்திலிருந்த கட்டிடங்களிலெல்லாம் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கோச்சடையான் படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இது கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா அல்ல. இப்படம் உருவாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் விழா. இப்போ நான் நிறைய பேசுறத விட, இந்த படத்தோட வெற்றி விழாவில் நான் நிறையப் பேசப்போகிறேன். முதல்ல இந்த படம் இப்படி உருவாகும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்ப இஷ்டம். ரொம்ப பிடிக்கும். 150 படங்கள் நான் பண்ணியிருந்தால்கூட, ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்துக்கிட்டே இருந்தது. இனிமேல் எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை. எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாமே நீங்க கொடுத்திருக்கீங்க.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில் கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் ராணா படம் தொடங்கினேன். அந்தப் படத்தோட கதையை நான் 20 வருஷமா மனசுக்குள்ள வச்சிருந்தேன். அந்தப் படம் தொடங்கின நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சு அப்படிங்குறது உங்களுக்கே தெரியும்.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பினாலும், ராணா கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியாம போச்சு. ஒரு நாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி ராணாவுக்கு மேலே கே.எஸ்.ரவிகுமார் கோச்சடையான் அப்படினு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்கனு சொன்னாங்க. இப்போ பண்ண முடியாதே, 2 வருஷமாவது ஆகுமே அப்படினு சொன்னேன். இல்ல. நீங்க முதல்ல கேளுங்க. அதை எப்படி பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. சரி கேட்கிறேனு கேட்டேன்.

ராணாவே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. ராணாவை விட எனக்கு கோச்சடையான் கதை ரொம்ப பிடிச்சது. நல்லாயிருக்கு ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கேட்டேன். நீங்க சரினு சொன்னீங்கன்னா ஒரு ஐடியா இருக்கு. சுல்தான்னு ஒரு படம் ஏற்கனவே சௌந்தர்யா பண்ணியிருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும், ரொம்ப பெருசா பண்ணனும் முடிவு பண்ணினேன். இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பேர்கிட்ட கேட்டேன், பேசினேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகுமேனு சொன்னாங்க. இல்ல. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு சொன்னாங்க.

உடனே சவுந்தர்யாகிட்ட பேசினேன். என்னம்மா... பெரிய பொறுப்பு இருக்குமே. பண்ண முடியுமானு கேட்டேன். நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம்தான். இந்தப் படத்துக்கு பட்ட கஷ்டத்தை வாயால எல்லாம் சொல்ல முடியாது.

இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்குன்னா அதற்கு உழைச்சவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

இதைவிட பெரிசாக இசை வெளியீட்டு விழாவை நடத்தத்தான் முடிவு செய்திருந்தார்கள். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். படத்தின் வெற்றிவிழாவை மிகப் பெரிய அளவில், எஸ்.பி.முத்துராமன் சார் கேட்டுக் கொண்ட மாதிரி நடத்தலாம்.

சவுந்தர்யா, ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர் தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, அவங்களை ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
இன்னும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். அதே நேரத்தில், குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு ஆகுற வரைக்கும் நல்லா பாத்து வளர்த்துட்டு, அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி சவுந்தர்யாவைக் கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்றுக்கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படின்னு நான் சொல்லியிக்கிறேன் என்றார்.




You May Also Like

  Comments - 0

  • saf Tuesday, 11 March 2014 02:42 PM

    சினிமா

    Reply : 0       0

    Gopalakrishnan Tuesday, 11 March 2014 03:50 PM

    இந்த படம் நல்லபடியாக வரவும், ஐயா ரஜினி அவர்கள் நூறாண்டு வாழவும் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X