2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

2,409 ஏக்கர் நிலத்தில் சிறுபோக பயிர்ச்செய்கை (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்று (08) புதன்கிழமை மாலை மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை சிறுபோகப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பது குறித்து பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கடந்த காலங்களில் 10:1 என்ற அடிப்படையில் நீர் வழங்கப்பட்டது. எனினும், குளத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் 'டிட்வா' புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு, இம்முறை 13:1 என்ற விகிதாசார அடிப்படையில் நீர் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தம் 2,409 ஏக்கர் நிலத்தில் சிறுபோகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

காலம்: வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பயிர்ச்செய்கை, குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக இம்முறை ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டு, ஜூன் மாதத்திற்குள் அறுவடை நிறைவு செய்யப்பட வேண்டும்.

மானியம்: விவசாயிகளுக்கான ஹெக்டேர் மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உர விநியோகம்: யூரியா உள்ளிட்ட உரங்களை விரைவாக விநியோகிக்கத் தேவையான கொள்வனவுக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சிறுபோக நிலங்கள் உரிய விவசாயிகளுக்கு மட்டுமே பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. பொது அமைப்புகள், கோயில்கள் அல்லது தேவாலயங்களுக்கு இம்முறை நிலங்கள் ஒதுக்கப்படவில்லை.

அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பைத் தவிர்த்து, மேலதிக இடங்களில் சட்டவிரோதமாகப் பயிர் செய்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே 18 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதோடு, விவசாய அமைப்புகளிலிருந்து தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள 'நியாய சபை' மாதம் ஒருமுறை மன்னாரில் இயங்கி வருகின்றது. எதிர்காலத்தில் இதற்கு நிரந்தர நீதிபதி ஒருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

எஸ்.ஆர்.லெம்பேட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .