Princiya Dixci / 2021 ஜூன் 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியின் கல்முனைக்குடியிலுள்ள சில முக்கிய இடங்களில் குப்பை வீசுவோரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
இது விடயமாக இன்று (28) அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கல்முனை மாநகர சபையால் கடந்த காலங்களை விட தற்போது திண்மக்கழிவகற்றல் சேவை மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“கல்முனைக்குடி வலயத்தைப் பொறுத்தளவில் ஒவ்வொரு வீதியிலும் வாரத்துக்கு இரு தடவை குப்பை சேகரிப்புக்காக திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. பிரதான வீதியில் நாளாந்தம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
“அத்துடன் இப்பிரதான வீதியின் சாஹிபு வீதிச் சந்தி, டொக்டர் றிஸ்வி வீதிச் சந்தி, நகர மண்டப வீதிச் சந்தி போன்ற இடங்களிலும் ஒவ்வொரு நாளும் காலை 6.30 தொடக்கம் 07 மணி வரை திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்கள் தரித்து நின்று குப்பைகளை சேகரிக்கின்றன.
“இதன்போது, அவ்விடங்களில் ஏற்கெனவே வீசப்பட்டு, குவிந்து கிடக்கின்ற குப்பைகள் அள்ளப்படுவதுடன், பொதுமக்களால் ஒப்படைக்கப்படுகின்ற குப்பைகளும் பொறுப்பேற்கப்படுகின்றன.
“எனினும், இவ்வாறு குப்பைகள் சேகரித்து, அகற்றிச் செல்லப்பட்ட பின்னரும் சிலர் வேண்டுமென்றே பொறுப்பற்ற முறையில் மேற்படி சந்திகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றனர்.
“சட்டத்தை மதிக்காமலும் பொதுநலன் சார்ந்த உணர்வு எதுவுமில்லாமலும் செய்கின்ற இந்த ஈனச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.
“கண்டிமூடித்தனமான இச்செயற்பாட்டினால் நகரின் இவ்வாறான முக்கிய இடங்கள் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் மிக அசிங்கமாகவும் காட்சியளிக்கின்றன.
“மேலும், பிரதான வீதியினால் செல்கின்ற உள்ளூர், வெளியூர் பயணிகளுக்கு இவை அருவருப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் முழு நகரத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது.
“ஆகையால், இனிவரும் நாட்களில் இவ்வாறான இவ்விடங்களில் குப்பை போடுவோரைக் கண்டறிந்து, அவ்விடத்திலேயே கைது செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸாரும் மாநகர சபை ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சி.சி.டி.வி கமெராக்களும் பெறப்படவுள்ளன.
“இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
20 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
33 minute ago