2026 மே 07, வியாழக்கிழமை

குடும்பஸ்தர் மர்ம மரணம்: உடல் பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2026 மே 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்


 வீட்டு மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், அவரது உடல் பாகங்கள் மேலதிகப் பரிசோதனைக்காகக் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினியடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (04) இச்சம்பவம் இடம்பெற்றது. மலயர் வீதி, விளினியடி-01 பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய உதுமாலெப்பை இப்றாகீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இவரது சடலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. அங்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிந்ததையடுத்து, மறுநாள் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சட்ட வைத்திய அதிகாரி நிபுணரின் பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரி நிபுணரினால் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் சடலத்தின் சில அவயங்கள் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர். பரிசோதனைகளின் பின்னர் குடும்பஸ்தரின் சடலம், இன்று நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .