2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

13ஆவது அரசியல் சட்ட திருத்தமும் தி.மு.க.வின் திடீர் மாற்றமும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 05 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று பேசி வந்த தி.மு.க. இப்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தத்தை வலியுறுத்திப் பேசி வருகிறது. இந்தியாவிற்கும்- இலங்கைக்கும் இடையே 1987இல் போடப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பற்றி குரல் எழுப்புகிறது. கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி தி.மு.க. டெசோ மாநாட்டை சென்னையில் நடத்தியது. அக்கூட்டத்திற்கு முன்பு நடைபெறுவதாக இருந்த "கருத்தரங்கு" விவாதத்திற்கான அஜெண்டாக்களில் அந்த 13ஆவது அரசியல் சட்ட திருத்தம் பற்றி குறிப்பிடவில்லை. பிறகு டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களில் ஒன்று கூட இலங்கை அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் பற்றி சுட்டிக்காட்டவில்லை. ஏனென்றால் அந்த அதிகாரப் பகிர்வை தி.மு.க. மனதார ஒப்புக்கொள்ளாத மனநிலையிலேயே கடந்த காலத்திலிருந்து இருந்து வருகிறது. அதனால்தான் அடிக்கடி தமிழ் ஈழம் பற்றி பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, திடீரென்று ஒருமுறை "கொசோவா, தெற்கு சூடான், தைமூர்" போல் தமிழர்களுக்கும் தனி ஈழம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்து, அதை இந்திய அரசே, "அது தி.மு.க.வின் கருத்து" என்று கூறி கைகழுவிவிட்டது. இவ்வளவு சீரியஸாக இருந்த தி.மு.க. இப்போது திடீரென்று 13ஆவது அரசியல் சட்டதிருத்தத்தின் மீது அக்கறை காட்டுகிறது.

ஐ.நா.மன்றத்தின் துணை பொதுச் செயலாளரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் டெசோ தீர்மானங்களைக் கொடுக்கும் போது தி.மு.க.விடம் இந்த மாற்றம் வந்திருக்கிறது. அங்கே கொடுக்கப்பட்ட தீர்மானத்தில்,"இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்டுள்ள இலங்கையின் 13ஆவது அரசியல் சட்ட திருத்தம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுபடுத்தி, அந்த மாகாணங்களுக்கு நிலம் சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் மற்றும் காவல்துறை அதிகாரங்களையும் வழங்கப்படுவதையும் கூறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது தி.மு.க. உள்ளபடியே இப்படியொரு தீர்மானம் வாசகங்கள் ஏதும் டெசோ மாநாட்டில் போடப்பட்ட 14 தீர்மானங்களிலும் இல்லை. ஆனால் இப்படியொரு கருத்தை முன்வைத்து டெசோ மாநாட்டில் பேசியது அம்மாநாட்டில் வரவேற்புரையாற்றிய மு.க.ஸ்டாலின் மட்டும்தான்! அவர் தன்னுடைய பேச்சில், "1987இல் இந்தியாவின் இளைய தலைவர் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் மிகுந்த எதிர்பார்ப்போடு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினார். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதற்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் இன்றுவரை நடைமுறைக்கு வந்தபாடில்லை" என்று குறைபட்டுக் கொண்டார். ஆகவே ஐ.நா. மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள இப்போதைய தீர்மானங்களில் டெசோ மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியதை வலியுறுத்தும் வகையில், இலங்கை அரசின் 13ஆவது அரசியல் சட்டதிருத்தம் பற்றி சுட்டிக்காட்டியிருப்பது ஓர் அதிரடி மாற்றம்.

அது மட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து நடைபெற்ற ஆய்வு பற்றிக் கூறியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியும், "இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலமாக இலங்கையின் அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அடுத்த ஆண்டிலாவது வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை" நினைவு கூர்ந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள "உடன்பிறப்பு" கடிதத்தில் கூறியிருக்கிறார். தமிழர்களுக்கு "ஈழமே" ஒரே வழி என்ற நிலைப்பாட்டில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் டெசோ மாநாட்டிற்குப் பிறகும், சமீபத்தில் ஐ.நா. சபை துணைப் பொதுச் செயலாளரை சந்தித்தபிறகும் இலங்கையின் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க கொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டதிருத்தத்தின் மீது அதிக அக்கறை காட்டுகிறது. இதற்கு அச்சாரம் போட்டவர் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். ஏனென்றால் அவர்தான் டெசோ மாநாட்டிலேயே ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். அதுமட்டுமல்ல, அந்த மாநாட்டிலேயே, "இலங்கையில் ஒரே கொடி, ஒரே அரசியல் சட்டம் என்று சொன்னால் கூட பரவாயில்லை. நம்மால் புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் முடியும்" என்று ஆணித்தரமாகக் கூறி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு காண திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவாக இருக்கிறது என்ற கருத்தை அம்பலப்படுத்தியவர். ஒரு காலத்தில் இந்தியாவிற்குள்ளேயே "திராவிட நாடு" கேட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பிறகு அதேயே "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்" என்ற ரீதியில் "மாநில சுயாட்சி" என்று ஜனநாயக பாதைக்கு ஏற்றவாறு தன்னை தயார் படுத்திக் கொண்டது. அதேபோல் இப்போது இலங்கை தமிழர் பிரச்சினையிலும், "தனி ஈழம்" என்பதை மாற்றி, "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு" என்ற பாதையை தேர்வு செய்திருக்கிறது. ஐ.நா.விற்கு கொடுத்துள்ள தீர்மானங்களில் "இலங்கை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்திருந்தாலும், தி.மு.க. முதல் முறையாக 13ஆவது அரசியல் சட்டம் பற்றி வலியுறுத்தி, நினைவுபடுத்திக் கூறியிருப்பது இப்பிரச்சினையில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும்.
இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை! விடுதலைப் புலிகளை ஆதரித்தது தி.மு.க. என்று காரணம் காட்டி 1990களில் அக்கட்சியின் ஆட்சி தமிழகத்தில் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பிறகு ஜெயின் கமிஷன் விசாரணையில் தி.மு.க.மீது குற்றம் சாட்டி அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் (இந்திய அரசு) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை 1997இல் ஐ.கே.குஜ்ரால் இந்திய பிரதமராக இருந்த போது வலியுறுத்தப்பட்டது. "தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க முடியாது" (அப்போது காங்கிரஸின் தயவில்தான் குஜ்ரால் பிரதமராக இருந்தார்) காங்கிரஸ் கட்சி போர்க்கொடி உயர்த்தி, அதை குஜ்ரால் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது. இதனால் இந்திய அரசே கவிழ்ந்து 1998இல் இந்திய நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வந்தது. இந்தப் பழியைப் போக்கிக் கொள்ளவே முதலில் காங்கிரஸ் கட்சியுடன் 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி வைத்தது தி.மு.க. அதுவும் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. வைத்த அந்தக் கூட்டணி உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உலக அளவில் பயங்கரவாதத்திற்கும், தனிநாடு கோரிக்கைகளுக்கும் எழுந்துள்ள எதிர்ப்புணர்வு தி.மு.க.வையும் பாதித்துள்ளது. அதனால்தான் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, இப்போது இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் பற்றியே பேசுகிறது. அதுவும் குறிப்பாக 13ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நீக்க வேண்டுமென்று இலங்கையில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த சட்ட திருத்தம் பற்றி பேச்சை தமிழகத்திலும், இந்தியாவிலும், ஐ.நா.மன்றத்திலும் தி.மு.க. எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் 1956களில் அக்கட்சி கோரிய "ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை, அமைதியான வாழ்க்கை" என்ற நிலைப்பாட்டை நோக்கிச் சென்றுள்ளது.

கட்சியின் நிலைப்பாடு இப்படியிருக்கிறதென்றால், தி.மு.க.வின் அடுத்த தலைவராக போற்றப்படும் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தமட்டில், இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரு "ப்ராக்டிகலான நிலைப்பாட்டை" எடுக்கவே முன் வந்துள்ளார். தமிழகத்தில் அவருக்குப் போட்டியாக இருக்கும் தலைவர் வரிசையில் உள்ள வைகோவிலிருந்தும், ஏன் கட்சிக்குள் தனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் கனிமொழி எம்.பி.யிடமிருந்தும் இந்த விடயத்தில் மாறுபடுகிறார். அதனாலேயே "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு தீர்வு" என்ற கொள்கை நிலைப்பாட்டை அவர் துணிவுடன் எடுத்தார். ஏனென்றால் ஸ்டாலினின் பார்வையில் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தி.மு.க.வில் இருக்கிறார்கள். தீவிரக் கருத்துக்களுடன் "தனி ஈழம்" வேண்டும் என்ற நினைத்தவர்கள் 1993இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ தலைமையில் பிறந்தவுடனேயே அங்கே போய்விட்டார்கள் என்றே எண்ணுகிறார். ஆகவே கனிமொழி, வைகோ போன்றவர்களுடனும், இதே தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்தும் டாக்டர் ராமதாஸ், சீமான் போன்றவர்களிடமிருந்து தான் விலகியும், வித்தியாசமாகவும் தமிழக அரசியலில் நிற்பதாகவே தன்னை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின். அதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வழிமொழிகிறார் என்பதே ஐ.நா.விஸிட்டிற்குப் பிறகு இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டதிருத்தம் மீது அவர் காட்டும் அக்கறை! குறிப்பாக, தொடர்ந்து 17 வருடங்களாக இந்திய அரசில் பங்கேற்று வரும் தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு இலங்கை தமிழர் பிரச்சினையின் தமிழக கோணத்தை மாற்றி அமைக்கும் என்றே எதிர்பார்க்கலாம். 13ஆவது அரசியல் சட்டதிருத்தம் நீக்கப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் கூட திடீரென்று தமிழகத்தில் இருந்தே இனி கிளம்பலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .