2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

13ஆவது திருத்தத்திற்கு எதிரான கோஷத்தோடு தெரிவுக்குழு அமைத்தல் சாத்தியமாகுமா?

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் நாடு என்ன பயனை அடைந்து இருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேவேளை 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்காக தமிழ்; கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் என்ன தீங்கு ஏற்பட்டது என்பது தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

நன்றாக கவனித்துப் பார்த்தால் இந்த இரண்டு சாராரும் உண்மையைத் தான் பேசுகிறார்கள், நியாயமான கேள்வியைத் தான் கேட்கிறார்கள். அமரசிங்க கேட்பதைப் போல் உண்மையிலேயே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் ஏதாவது நன்மை நாட்டுக்கு கிடைத்திருக்கிறதா? அதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா?

இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அது அறிமுகப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகள் கழிந்தும் தமது பிரச்சினைகள் தீர்ந்ததாக தமிழர்கள் உணரவில்லை. அதாவது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. அதனால் தான் தமிழ் தலைவர்கள் புதிய தீர்வுகளை கேட்கிறார்கள்.

மறுபுறத்தில் மாகாண சபைகளை எதிர்;ப்பதற்காக அச்சபைகளால் நாட்டுக்கு என்ன தான் தீங்கு இழைக்க்பட்டுள்ளது என்றும் கேள்வியெழுப்பலாம். மாகாண சபைகள் நாட்டு பிரிவினைக்கு இட்டுச் செல்கிறது என்று சில பேரினவாத தலைவர்கள் வாதிடலாம். ஆனால் அவ்வாறானோர் மறந்து விடும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இலங்கையில் பிரிவினைவாதமானது மாகாண சபைகளோ அல்லது அவற்றுக்கு அடிப்படையாக அமைந்த அதிகார பரவலாக்கல் என்ற எண்ணக்கருவோ அறிமுகப்படுத்தடுவதற்கு முன்னரே உருவாகியதொன்றாகும் என்பதே.

சரியாகக் கூறுவதாயின் 13ஆவது அரசியலமைப்பத் திருத்தமோ அல்லது மாகாண சபைகளோ பிரிவினைவாதத்தை கொண்டு வரவில்லை. மாறாக, பிரிவினைவாதம் தான் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் அதன் மூலம் மாகாண சபைகளையும் கொண்டு வந்தது.

இலங்கையில் பிரிவினைவாதமானது 1970களில் தான் கவனத்திற்கொள்ளக் கூடிய வகையில் தோற்றம் பெற்றது. 1976ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் தமிழர் விடுதலை கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டின் போது அது உத்தியோகபூர்வமாக அரசியல் களத்திற்கு வந்தது.

இவ்வாறு களத்திற்கு வந்த பிரிவினைவாதத்திற்கு பரிகாரமாகவே இந்திய வெளியுறவுச் செயலாளர்களான ஜீ.பார்த்தசாரதி மற்றும் ரொமேஷ் பண்டாரி ஆகியோரின் தலையீட்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம் 1980களின் ஆரம்பத்தில் அதிகார பரவலாக்கல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது.

அதன் பிரகாரம் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டின் போதும் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டின் (PPஊ) போதும் மாகாண சபைகளை அறிமூகப் படுத்துவது பற்றி ஆராயப் பட்டது. இறுதியில் வேறு சில பூகோள அரசியல் காரணங்களுக்காக இந்தியா பலாத்காரத்தை பாவித்து 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்பத் திருத்தத்தையும் அதன் மூலம் மாகாண சபைகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்தது.

இது தான் வரலாறு. எனவே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமோ அல்லது மாகாண சபைகளோ நாட்டுப் பிரிவினைக்கு இட்டுச் செல்கிறது என்று வாதிட முடியாது.

இப்போது 13ஆவது அரியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள விவாதம் அச்சட்டத் திருத்தம் நன்மையானது என்பதற்காகவோ அல்லது தீமையானது என்பதற்காகவோ ஏற்பட்டதல்ல. இது வேறு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். குறிப்பாக திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள மாகாண சபைகளின் அனுமதி வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையினால் ஏற்பட்ட நிலைமையாகும்.

எனினும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோஷத்தின் காரம் தற்போது குறைந்து வருகிறது. ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்தினால் ஏறத்தாழ ஜனாதிபதியைப் போல் நடந்து கொள்ளும் அதேபோல் மக்களாலும் ஜனாதிபதியைப் போல் மதிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தான் இம் முறை13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான போரை ஆரம்பித்து வைத்தார். ஆனால் அந்த காரணத்தையும் மதியாது ஆளும் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பவர்களை எதிர்க்க முன் வந்துள்ளனர்.

அமைச்சர்களான வாசுதேவ நானாயக்கார, திஸ்ஸ வித்தாரண மற்றும் டியூ குணசேகர போன்ற இடதுசாரிகள் ஆரம்பத்திலேயே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான கருத்துக்களை சாடி வந்தனர். இப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரானவர்களை பொருட்படுத்தாததைப் போல் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களில் முதலாவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்றியமைக்க அரசாங்கம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றார். ஆரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை ஏற்று 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும் அறிகுறிகள் இருந்திருந்தால் ரமபுக்வெல்ல ஒருபோதும் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

அதனை அடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவும் இதே கருத்தை வெளியிட்டு இருந்தார். சிலவேளை சர்வதேச நெருக்குதல் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள் வளர்ந்து வந்த நிலைப்பாட்டை முடக்கிருக்கலாம்.

ஓக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமை பேரவையின் உலகளாவிய இடைக்கால மீளாய்வுக் கூட்டஙகள் நடைபெறவிருக்கின்றன. நவம்பர் மாதம் 1ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவிருக்கின்றன. அப்போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிய கேள்வியொன்றும் இலங்கையிடம் கேட்கப்படவிருக்கிறது என தெரிய வருகிறது. போதாக்குறைக்கு இலங்கையைப் பற்றி மீளாய்வு செய்யும் குழுவிற்கு இந்தியாவே தலைமை தாங்குகிறது.

இதற்கிடையே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் சிற்பியான இந்திய அரசாங்கம் அத்திருத்தத்தை எதிர்த்து கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அவரது இந்திய விஜயத்தின் போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய விடயம் ஆராயப்படவில்லை.

அது சரி தான். ஏனெனில் இலங்கையில் என்ன அந்தஸ்த்தில் அவர் இருந்தாலும் இந்தியாவுக்கு அவர் ஒரு அதியாரி மட்டுமே. அதுவும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி மட்டுமே. அவரோடு இந்தியா அரசியல் விடயங்களை ஆராயப் போவதில்லை.

ஆனால் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக அவர் கருத்து வெளியிட்ட உடன் அவர் இந்திய அதிகாரிகளை சந்திக்கப் போகிறார் என்ற உணர்வே அரசாங்கத்தை சிந்திக்கச் செய்திருக்க வேண்டும். எனவே தான் அமைச்சர்களான ரம்புக்வெல்லவும் சிறிசேனவும் 'நாங்கள் அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை' என்ற தோறனையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள் போலும்.

முக்கியமானதோர் விடயம் என்னவென்றால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென நியமிக்கப்படவிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொள்ளுமாறு அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்ததிக் கொண்டு இருக்கும் பின்னணியிலேயே அரசாங்கத்திற்குள் இருந்தே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுந்தன.

அதிகார பரவலாக்கலுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிகமாக நியமிக்கப்படும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிப்பதில் பயனில்லை என்பது தெரிவுக்குழுவில் சேராதிருப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் ஒரு வாதமாகும். அவ்வாறாயின் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நம்பிக்ககை ஏற்படும் வகையில் நடந்து கொள்வதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இனப் பிரச்சினையை தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திடம் இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் சேர்த்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அந்த நோக்கம் இல்லாவிட்டாலும் அந்த நோக்கம் இருப்பதைப் போலவே அரசாங்கம் உலகுக்கு காட்டிக் கொள்கிறது. அதற்காகவும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவுக் குழுவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறிருக்க, அதிகார பரவலாக்கல் முறையையே ஒழுப்ப்பதாக அரசாங்கத்திற்குள் ஜனாதிபதிக்கு சமமான அந்தஸத்திலுள்ளவர்கள் கர்ஜிக்கும் நிலையில் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தெரிவுக்குழுவில் சேர்வதற்கான நம்பிக்கை உருவாகாது.       

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .