2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குற்றப் பிரேரணையால் எழும் கேள்விகள்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்கள் அவருக்கு பெரும் சோதனையாக இருக்கலாம். சிலவேளை அது ஏற்கனவே மனித உரிமை விடயங்களில பல நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்திற்கும் சில பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். ஆனால் அரசியல் மற்றும் சட்டத்துறை மாணவர்கள், இந்த விவகாரத்தை ஆய்வுக்கான சிறந்ததோர் உதாரணமாகக் கருதக்கூடும்.

இந்த விடயம் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையிலான மோதலாகவே பலர் வர்ணிக்கிறார்கள். ஆனால் ஒரு வகையில் இது நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இடையிலான மோதல் என்பதை விட அத்துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் சில நபர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலாகவும் எடுத்துக் காட்டலாம்.

ஏனெனில் இவ்விரு துறைகளும் சாதாரண நிலைகளில் இயங்கிக்கொண்டு இருக்கும் போது இயல்பாகவே ஏற்பட்ட மோதல் அல்ல. மாறாக இது இரண்டு துறைகளிலும் உயர் பதவிகளை வகிக்கும் சிலருக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட கோப தாபங்களின் விளைவேயாகும்.

நீதித் துறையில் உயர் பதவி வகுக்கும் நீதியரசர்களும் பாரதூரமான முறையில் தவறிழைக்கலாம். அப்போது அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். அது போன்றதோர் நிலைமை தான் இப்போது ஏற்பட்டு இருக்கிறது என அரச தரப்பில் கூறப்படுகிறது.

அதேவேளை இது பிரதம நீதியரசர் திவிநெகும சட்டம் தொடர்பான வழக்கு போன்ற சில வழக்குகளின் தீர்ப்புகளை அரசாங்கத்தின் சில தலைவர்களுக்கு வேண்டிய முறையில் வழங்காததன் காரணமாக கொண்டு வரப்பட்ட பிரேரணையென எதிர்க் கட்சிகள் கூறுகின்றன.

நீதியரசர்களை எவ்வாறு பதவி நீக்கலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கும் சட்டத்தின் பிரகாரமே குற்றப் பிரேரணை சமர்ப்பித்துள்ளதாகவும் எனவே அதில் தவறு ஏதும் இல்லை என்றும் அரச தரப்பில் கூறப்படுகிறது. உண்மை தான். ஆனால் சட்டப்படி அதனை சமர்ப்பித்தாலும் அதன் நோக்கம் தனிப்பட்ட பிரச்சினையே என்பதால் அது நாகரிகமானதல்ல என எதிர்க் கட்சிகள் வாதிடுகின்றன.

உதாரணமாக, முறையாக தமது சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்பது பிரதம நீதியரசருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாகும். ஆனால் அரசாங்க எம்.பி.க்களில் எத்தனை பேர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளார்கள் என கோட்டே நாக விகாரையின் அதிபர் மாதுலுவாவே சோபித்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். அரசாங்க தரப்பிலிருந்து அதற்கு இதுவரையில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

இலங்கையின் நீதித்துறை அழுக்கடைந்தது. ஊழல் மலிந்தது என்றுதான் கூறப்படுகிறது. வருடாந்தம் ஊழல் மலிந்த நிறுவனங்களைப் பற்றிய டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நெஷனல் நிறுவனம் தாயாரிக்கும் பட்டியலில் பொலிஸ் திணைக்களமும் கல்வி அமைச்சும் நீதித்துறையும் முதல் மூன்று இடங்களை மாறி மாறிப் பெற்றுக்கொள்வதால் நீதித்துறை தூய்மையான துறையென்று கூற முடியாது.

பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பித்துள்ள அரச தரப்பினர் டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நெஷனல் நிறுவனத்தின் அறிக்கையை இப்போது ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்னர் அரசாங்கம் அந்த அறிக்கையை கடுமையாக எதிர்த்தது.

அதேவேளை இது அரசாங்கத்தின் சில தலைவர்களுக்கு வேண்டிய முறையில் பிரதம நீதியரசர் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்காததன் காரணமாக கொண்டுவரப்பட்ட பிரேரணையென எதிர்க் கட்சிகள் கூறும் போது அவ்வாறாயின் நீதித்துறை அரசாங்கத்தின் தேவைக்கேற்பவா முன்னர் தீர்ப்புகளை வழங்கியது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

குற்றப் பிரேரணையொன்றின் போது சம்பந்தப்பட்ட நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையாக இருந்தாலும் எதிர்க் கட்சிகள் அக்குற்றப் பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை. அதேவேளை அக்குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தின் சகல உறுப்பினர்களும் அதனை ஆதரிக்கத் தான் போகிறார்கள்.

இந்த நிலையில் குற்றப் பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டாலும் அது உண்மையிலேயே நியாயமானதா, உண்மையான குற்றச்சாட்டுக்களை கொண்டதா என்று சாதாரண மக்களால் விளங்கிக் கொள்ள முடியாது.


நீதியரசர் ஒருவருக்கு எதிரான குற்றப் பிரேரணையொன்று நாடாளுமன்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிலுள்ள குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றினால் விசாரணைக்குள்ளாக்கப்படும்.

ஆனால் அத்தெரிவுக் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின்கள் தான் கூடுதலாக இருப்பார்கள். இது தற்போதைய குற்றப் பிரேரணைக்கான தெரிவுக் குழுவின் நிலைமை மட்டுமல்ல. 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணைக்கான தெரிவுக் குழுவின் நிலைமையும் இதுவே.

இப்போது ஆளும் கட்சியில் இருக்கும் பலர் அக்காலத்தில் எதிர்க் கட்சியிலேயே இருந்தார்கள். அப்போது அவர்கள் தெரிவுக் குழுவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை விமர்சித்தார்கள். இப்போதைய எதிர்க் கட்சியில் இருக்கும் பலர் அப்போது தெரிவுக் குழுவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை நியாயப் படுத்தினார்கள்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுதலாக இருக்கும் தெரிவுக் குழுவொன்றின் உறுப்பினர்களால் நீதியரசர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது அவ்வுறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளின் தன்மையை பொறுத்து முடிவுகளை எடுப்பார்களா அல்லது  தத்தமது கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்து முடிவுகளை எடுப்பார்களா?

குற்றப் பிரேரணைகள் இரு சாராருக்கு எதிராக கொண்டுவரப்படலாம். உயர் மட்ட நீதிமன்றங்களின் நீதியரசர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவுமே குற்றப் பிரேரணைகள் கொண்டுவரப்படலாம். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அரசியல்வாதிகள் மட்டுமே அவற்றைக் கொண்டு வரலாமே தவிர நீதித் துறையினரால் அவற்றை கொண்டுவர முடியாது.

ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று விசாரிக்காது. மாறாக நீதிமன்றமே அக்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். ஆனால் அதுவும் இறுதியில் நாடாளுமன்ற பெரும்பான்மை வாக்குகளாலேயே நிறைவேற்றப்படும்.

நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதித்துறையினரே விசாரணை செய்வது முறையானதாக தெரியவில்லைதான். ஆனால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விடயத்தில் தெரிவுக் குழுவொன்றின் பெரும்பான்மை வாக்குகளாலேயே இறுதி முடிவு எடுக்கப்படவிருக்கின்றது.

எனவே சட்டம் மற்றும் அரசியலை கற்கும் மாணவர்களுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சிறந்த நடைமுறை பாடமாக அமைந்து இருக்கிறது எனலாம்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .