2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

தண்டவாளத்தில் தலையை வைத்த மன்சூர் அலிகானால் பரபரப்பு

S.Renuka   / 2026 மார்ச் 31 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு இடையே, சுயேச்சை வேட்பாளராகக் களம் கண்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் செவ்வாய்க்கிழமை (31) அன்று திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று, திடீரென ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதைப் பார்த்த அங்கிருந்த  பொலிஸார், அவரை உடனடியாக தண்டவாளத்திலிருந்து எழுப்ப முயன்றுள்ளனர்.

ஆனால், மன்சூர் அலிகானின் இந்தச் செயலுக்குப் பின்னால் ஒரு வரலாற்று ரீதியான ‘ட்விஸ்ட்’ இருந்தது. 

1953-ஆம் ஆண்டு கல்லக்குடிக்கு ‘டால்மியாபுரம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதே தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தினார். 

அந்தப் போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், தற்போது நிலவும் சில அரசியல் சூழல்களை விமர்சிக்கும் விதமாகவுமே தான் இவ்வாறு செய்ததாக மன்சூர் அலிகான் விளக்கமளித்தார்.

 "கலைஞர் அன்று செய்த அதே வீரமிக்க போராட்டத்தை நானும் செய்கிறேன்" என்று அவர் கூறியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மன்சூர் அலிகான் தண்டவாளத்தில் படுத்திருந்த சமயம் நல்வாய்ப்பாக ரயில்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அனுமதியின்றி ரயில் தண்டவாளத்தில் இறங்குவது மற்றும் பாதுகாப்பற்ற முறையில் செயல்படுவது குறித்து ரயில்வே  பொலிஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்வார்களா அல்லது எச்சரிக்கையுடன் விடுவிப்பார்களா என்பது தெரியவரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .