2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

’அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது’

Freelancer   / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படைத் தூணான தனிமனித சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, நீதித்துறை மற்றும் சிறைச்சாலைத் துறை போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்ற போதிலும், இன்று அவை அரசாங்கத்தினால் மிக மோசமான முறையில் கையாளப்படுகின்றன  என அவர் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்படுகிறார் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஓய்வுபெற்ற மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் மேடைகளில் இருந்த ஒரு அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்வதற்காக சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைத் துறையிலும் அரசாங்கம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், எவ்வித அரசியல் சார்புமின்றி நேர்மையாகச் செயற்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனித உரிமை வழக்கின் மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்பது உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். நீதி அமைச்சின் செயலாளராக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிட முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என அவர் மேலும் விவரித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .