2026 மே 13, புதன்கிழமை

தப்புமா? த.வெ.க.? தமிழக சட்டசபையில் சலசலப்பு

Editorial   / 2026 மே 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தமிழக சட்டசபையில் ஆளும் ‘தமிழக வெற்றிக் கழக’ (த.வெ.க.) அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

நம்பிக்கை தீர்மானம்: சட்டசபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழிய, அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீது தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வர்.

வாக்கெடுப்பு முறை: விவாதங்களுக்குப் பிறகு, தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர் எவரேனும் ‘டிவிஷன்’ (Division) முறைப்படி வாக்கெடுப்பு நடத்தக் கோரினால், சபாநாயகர் அதற்கு உத்தரவிடுவார். சட்டசபையில் வருகை தந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 (அரைவாசிக்கும் மேலான) ஆதரவைப் பெற்றால் தீர்மானம் வெற்றியடையும்.

தீர்மானம் வெற்றி பெற்றால் அரசு தனது பணியைத் தொடரும்; ஒருவேளை தீர்மானம் தோல்வியுற்றால் அது குறித்து ஆளுநருக்குத் தெரிவிக்கப்படும்.

கட்சிகளின் நிலைப்பாடு: த.வெ.க. அரசுக்கு ஆதரவாகத் தமது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பர் என்று சி.வி. சண்முகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேவேளை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அணியினர் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இருப்பினும், இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சட்டசபையில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ள நிலையில், உறுப்பினர்களிடையே விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தங்களுக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஒருசில உறுப்பினர்கள் எழுந்து நின்றமையால்  சபையில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .