2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மணல் மாபியாவைக் கட்டுப்படுத்த திணறும் அரசாங்கம்

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கபிலன் செல்வநாயகம் 

 "மணல் மாபியாக்கள் உருவெடுக்கிறார்கள் என்றால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது யார்? மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத, வினைத்திறனற்ற அரசியல் தலைமையே தற்போது அதிகாரத்தில் உள்ளது" என ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் திங்கட்கிழமை (30) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்:

  "எமது பிரதேசங்களில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் அச்சமூட்டுபவையாக உள்ளன. அப்பாவிப் பெண்களை மயக்கமுறச் செய்து, நகைகளைக் கொள்ளையிட்டு அவர்களைக் கிணற்றுக்குள் தள்ளிப் படுகொலை செய்யும் கொடூரங்கள் நடக்கின்றன. இக்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் மகளே கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அதனைத் தடுக்கச் செல்லும் பொலிஸாரையே மோதிப் படுகொலை செய்கின்றனர்.

நீதிமன்ற அறிவுறுத்தல்களைப் பொருட்படுத்தாது ஆலயக் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுவதும், சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுகின்றன."

  "போதைப்பொருள் ஒழிக்கப்படும், சிறப்பான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்த போதிலும், எமது பிரதேசத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் வினைத்திறனற்றவர்களாகவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர். இதுவே மக்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களுக்குக் காரணமாகும்."

  "பொலிஸ் அதிகாரி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவசரக் கூட்டம் நடத்திய அமைச்சர் சந்திரசேகரன், மணல் மாபியாக்கள் குறித்துப் பேசுகிறார். உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மணல் அகழ்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், நியாயமான விலையில் மக்களுக்கு மணல் கிடைத்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால் சட்டவிரோத மணல் அகழ்வோ அல்லது பொலிஸ் அதிகாரியின் உயிரிழப்போ ஏற்பட்டிருக்காது.

கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில், 'மகேஸ்வரி நிதியத்தின்' ஊடாக உரிய விதிமுறைகளுடன் நியாயமான விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது."

  "யாழ். மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைக்கூடச் செயற்படுத்த முடியாத நிலையில் இன்றைய அரசியல் தலைமை உள்ளது. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்தபோது யாழ். நகரில் மலசலகூடத் தொகுதி அமைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்துச் சபையினருக்கும் மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து அதனை முன்னெடுத்துச் செல்லச் சரியான தலைமைத்துவம் தற்போது இல்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .